சாம்பார் சாதம்
தேவையான பொருட்கள்

வேகவைத்த துவரம் பருப்பு - 2 கிண்ணம்
வெந்த சாதம் -2 கிண்ணம்
ஆலிவ் எண்ணெய் -2 மேசைக்கரண்டி
கொத்துமல்லி -1 கட்டு
நெய் -1 தேக்கரண்டி
திடீர் புளி (instant tamarind) -1 1/2 தேக்கரண்டி
தக்காளி, வெங்காயம் நறுக்கியது -1 கிண்ணம்
பீன்ஸ், காரட் 1" நீளத்திற்கு நறுக்கியது-1/2 கிண்ணம்
பட்டாணி -1/4 கிண்ணம்
உப்பு -தேவைக்கேற்ப
மஞ்சள் பொடி -1/2 தேக்கரண்டி
சாம்பார் பொடி -2 1/2 தேக்கரண்டி
மிளகு -1/2 தேக்கரண்டி
சீரகம் -1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் வற்றல் -3
உளுத்தம்பருப்பு -1 மேசைக்கரண்டி
கொத்துமல்லி விதை -2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு -2 மேசைக்கரண்டி

செய்முறை

மிளகு, மிளகாய் வற்றல், சீரகம், உளுத்தம்பருப்பு, கொத்துமல்லி விதை (தனியா), கடலைப்பருப்பு இவற்றை கொஞ்சம் எண்ணெயில் வறுத்து மிக்ஸியில் கரகரப்பாகத் தண்ணீர் விடாமல் பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.

குக்கரில் திடீர் புளியைப் போட்டு தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.

இதில் எல்லாக் காய்கறிளுடன் உப்பு, சாம்பார் பொடி போட்டுக் கலந்து விடவும். கொத்துமல்லியின் தண்டுகளை மட்டும் பொடியாக நறுக்கி இதில் போடவும். இத்துடன் ஆலிவ் எண்ணெய் விட்டுக் கலந்து அடுப்பில் வைத்து மூடி, குக்கர் வெயிட் (Weight) போட்டு 4 சீழ்க்கை (whistle) வந்ததும் இறக்கி, தானாக அழுத்தம் அடங்கிய பின்னர் திறக்கவும்.

மறுபடி தளதள என்று கொதிக்கவிடவும். இப்போது பொடி செய்ததை இதனுடன் கலந்து நன்றாக ஒரு நிமிடம் கொதித்த பின்னர் வெந்த பருப்பை மசித்து இதில் போடவும். கொதிக்க ஆரம்பித்த உடன் இரண்டு கப் வெந்த சாதத்தை இதனுடன் போட்டுக் கலந்து நெய் சேர்த்து, கொத்துமல்லித் தழை நறுக்கிப் போட்டுக் கலந்து, அடுப்பை அணைத்து விட்டு, குக்கர் மூடியால் மூடி, வெயிட்டைப் போட்டு விடவும்.

இதை சாப்பிடுவதற்குச் சில மணிநேரம் முன்னாலேயே செய்து வைத்து, பின்னர் சாப்பிட்டால் அதிகச் சுவையுடன் இருக்கும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com