முன்னதாகத் தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல்?
மக்களவைத் தேர்தலின் தோல்விக்கு பின்பு தினம் ஒரு சலுகை, தினம் ஒரு அறிவிப்பு என்று அ.தி.மு.க. அரசு அறிவித்துக் கொண்டிருக்கிறது. மே மாதம் 18ம்தேதி ஒரே அறிக்கையின் மூலம் பொதுவிநியோக அட்டையில் 'எச்' முத்திரை நீக்கம், விவசாயிகளுக்கும், குடிசை வாசிகளுக்கும் மீண்டும் இலவச மின்சாரம், சத்துணவில் முட்டை என்று வரிசையாகச் சலுகைகள் அளித்து மக்கள் நலம் காக்கும் அரசு என்ற வகையில் செயல்படத் தொடங்கிவிட்டது. அதுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்கள் மற்றும் இதழாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு களை எல்லாம் திரும்ப பெற்றுக் கொண்டது. பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியிருக்கு இலவச பஸ் பாஸ் போன்றவை மறுபடியும் வழங்கியது.

ஐந்து வருடங்கள் முடியும் முன்பே சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்திக்க ஜெயலலிதா தயார்நிலை ஏற்படுத்துவதாகவும், அதற்கு முன்பு மக்களுக்குத் தங்கள் அரசின் மீது நம்பிக்கை வரவழைப்பதற்காகவே இத்தனை அதிரடி நடவடிக்கைகள் என்றும் அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியும் அ.தி.மு.க. அரசைக் கலைக்க வற்புறுத்தாது என்றே தெரிகிறது. அவர்களும் மத்திய அரசில் தங்கள் செல்வாக்கின் மூலம் கிடைக்கக் கூடிய சில சலுகைகளைத் தமிழகத்துக்குப் பெற்றுத் தருவதில் முனைப்பாகச் செயல்படுவதாக தெரிகிறது. 2006ஆம் ஆண்டு வரப்போகிற சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்தே அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் காய்களை நகர்த்துகின்றன. அதில் பொதுமக்கள் பயனடைவது நல்லதுதானே.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com