ஆரஞ்சு முந்திரி சாதம்
தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி - 2 கிண்ணம்
துருவிய ஆரஞ்சுத் தோல் - 2 தேக்கரண்டி
புதிதாகப் பிழிந்த ஆரஞ்சுச் சாறு - 1 கிண்ணம்
ஆரஞ்சு அல்லது மஞ்சள் குடமிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம்
பச்சை மிளகாய் நறுக்கியது - 1 தேக்கரண்டி
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம்
வெள்ளை மிளகுப்பொடி - 1 தேக்கரண்டி
இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 1 1/2 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
வறுத்த முந்திரி பருப்பு - 15

செய்முறை

ஒரு வாயகன்ற ஒட்டாத (நான்-ஸ்டிக்) பாத்திரத்தில் எண்ணெய், வெண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, மிளகாய் போட்டு வதக்கி, பின்னர் தண்ணீர் விட்டு ஆரஞ்சுச் சாறு, ஆரஞ்சுத் தோல் போட்டுக் கொதித்ததும் உப்பு, மிளகுப் பொடி போடவும். உடனே அரிசியைப் போட்டு வேகவிடவும். பாதி வெந்ததும் நறுக்கிய குட மிளகாயை போட்டு கலக்கி விடவும். தண்ணீர் வேண்டுமானால் சிறிது அளவு மேலும் விட்டுக் கொள்ளலாம்.

அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். நன்கு பொலபொலவென்று அரிசி வெந்ததும் இறக்கி, முந்திரிப் பருப்பு போட்டுக் கலந்து எடுத்து வைக்கவும். சில புதினா இலைகளையும் ஆரஞ்சுச் சுளைகளையும் மேலாக வைத்து அலங்கரிக்கலாம்.

பின்குறிப்பு: இதைப் போலவே அன்னாசிச் சாறு, அன்னாசி துண்டங்கள் வைத்து அன்னாசி சாதம் செய்யலாம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com