போகிறது பொடா
முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கத்துடன் கொண்டு வந்த 'பொடா' சட்டத்தை தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று விலக்கிக் கொண்டதையடுத்துத் தமிழக அரசியலிலும் பரபரப்பு தென்பட்டது.

பொடா சட்டத்தை விலக்கிக் கொள்வதற்கான தீர்மானம் வருகிற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும். அண்மையில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடி மிக முக்கியமான இரு முடிவுகளை எடுத்தது. ஒன்று, பொடா சட்டத்தை விலக்கிக் கொள்வது, மற்றொன்று 1967ம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்திற்கு வலுவூட்டும் வகையில் அச்சட்டத்தில் பெரிய திருத்தங்களை கொண்டுவருவது என்பவையாகும்.

2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவசரச் சட்டமாகப் பிறப்பிக்கப்பட்ட 'பொடா', 2002 மார்ச் 28ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டு அமுலாக்கப்பட்டது. தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை மட்டுமன்றி, அந்த அமைப்புகளுக்கு ஆதரவளிப்போர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க இச்சட்டத்தில் வகை செய்யப்பட்டிருந்தது. 'பொடா'வில் முதன்முதலாகத் தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர் ம.தி.மு.க தலைவர் வை.கோ. தான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று முதலிலிருந்தே குரல் கொடுத்தவர். அவர் கைது செய்யப்பட்டு சுமார் 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் ம.தி.மு.கவைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து பழ. நெடுமாறன் போன்றோரும் கைது செய்யப்பட்டனர். தொடர் கைதுகளின் விளைவாகத் தமிழக எதிர்க்கட்சிகள் இச்சட்டத்திற்கு எதிராக மத்திய அரசிடம் குரல் கொடுக்கத் தொடங்கியதையடுத்து, நீதிபதி சர்க்காரியா தலைமையில் 'பொடா மறு ஆய்வுக் குழு' அமைக்கப்பட்டதும், நாடு முழுவதும் பல மாநிலங்களில் பொடா சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது என்கிற புகார்கள் வந்தன.

மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் அமலில் இருக்கும் வகையிலேயே இயற்றப்பட்ட பொடா சட்டம் வருகிற அக்டோபர் மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகின்ற நிலையில், இச்சட்டத்தை மத்திய அரசு விலக்கி கொள்ள முடிவு எடுத்துள்ளது. பொடா சட்டம் மத்திய அரசால் விலக்கிக் கொள்ளப்படும் என்று அறிவிப்பு வருவதற்கு முன்பே தமிழக அரசு ம.தி.மு.க பொதுச்செயலர் வை.கோ. மற்றும் ம.தி.மு.க.வினர் மீது இச்சட்டத்தின் கீழ் தொடர்ந்திருந்த வழக்குகளை திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

நெல்லையிலிருந்து சென்னை வரை 42 நாட்களில் சுமார் 1,025 கி.மீ. தூரம் நடைப்பயணத்தைத் தொடங்கியுள்ள வைக்கோவுக்கு அரசின் வழக்கு விலக்கல் செய்தி பெரும் உற்சாகத்தை அளித்திருக்கிறது. எந்தத் திருமங்கலத்தில் இவர் பேசிய பேச்சு 19 மாத சிறைவாசத்தை கொடுத்ததோ, அதே திருமங்கலத்தை வைக்கோ தொட்ட நாளன்று தான் அவர் மீது தமிழக அரசு தொடுத்த 'பொடா' வழக்கு திரும்பப் பெறப்பட்டது என்ற செய்தியையும் அவருக்குத் தெரிவித்தது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com