ஆசிரியர் தினம்
அன்பைச் சொல்லித் தந்தாங்க
அம்மா நமக்கு வீட்டிலே
அப்பா சொல்லித் தந்ததோ
அளவில்லாத விளையாட்டு!

முன்பு நடந்த கதைகளும்
மூத்தோர் பழ மொழிகளும்
அன்பாய்ப் பாட்டி தாத்தாவும்
அழகாய்ச் சொல்லித் தந்தாங்க

தினந் தினமும் பள்ளியில்
தெளிவாய் அறிவு பெருகவே
எனக்குப் பல பாடங்கள்
இதமாய்ச் சொல்லித் தருகிற

ஆசிரியர் போலவே
யாருமில்லை உயர்ந்தவர்!
நேசிக்கிறேன் அவரையே
நெஞ்சினிலே நித்தமும்!

வரலாறு கணிதமும்
வரைந்திடவே படங்களும்
சுரத்தோடு பாடலும்
சுவையான மொழிகளும்

அறிவியலும் தூய்மையும்
ஆரோக்கிய வாழ்க்கையும்
அறிந்திடவே கற்பிக்கும்
ஆசிரியர் தெய்வமே!

அவரை எண்ணிப் போற்றவே
ஐந்தாம் நாள் செப்டம்பர்
தவறாமல் வைத்தனர்
ஆசிரியர் தினமென!

மதுரபாரதி

[குறிப்பு : நமக்குக் கல்வி கற்றுத் தரும் ஆசிரியர்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5ஆம் தேதி 'ஆசிரியர் தின'மாகக் கொண்டாடப்படுகிறது. இது முன்னாள் இந்திய ஜனாதிபதி மேதகு டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளாகும். அவர் ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, உலகம் போற்றும் சிந்தனையாளராகவும், சிறந்த பேச்சாளராகவும், எல்லாவற்றுக்கும் மேல் பாரத நாட்டின் ஜனாதிபதியாகவும் புகழ் பெற்றார். ஆகவே குழந்தைகளே, நீங்கள் கண்டிப்பாக ஆசிரியர் தினத்தன்று இந்தத் தகவலை உங்கள் அன்பான ஆசிரியருக்குச் சொல்லி, அவருக்கு உங்கள் நன்றியைச் செலுத்துங்கள்.]

© TamilOnline.com