அவந்தியின் நாட்டிய அரங்கேற்றம்
ஆகஸ்டு 29, 2004 அன்று ஷோபா நடராஜனின் சிஷ்யையான அவந்தி பாலின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிகாகோ நிகழ்கலை மைய (Chicago Center for Performing Arts) அரங்கத்தில் நடைபெற்றது. இதன் அரங்கம் மேடையாக அல்லாது ஒரு களம்போல் இருக்கும். அரங்கேற்ற தினத்தன்று அந்த இடம் கோலம், மண்ணின் நிறங்கள், வெண்கல விளக்கு இவற்றோடு ஒரு தென்னிந்திய முற்றமாகவே மாறிவிட்டிருந்தது. கம்பீர நாட்டையில் அமைந்த மல்லாரியோடு நிகழ்ச்சி துவங்கியது. அலாரிப்பைத் திருப்புகழ் ராகமாலிகையில் வித்தியாசமாகத் தந்தார். ரீதி கௌளையில் 'ஆயிரம் ஆயிரம் அற்புதங்கள்' பாடல் ஏசு கிறித்துவின் அற்புதங்களின் மேலான வியப்பைச் சிறப்பாகப் படம்பிடித்தது. லால்குடி ஜெயராமனின் 'இன்னும் என் மனம்' என்ற சாருகேசி ராக வர்ணத்திற்கு, கிருஷ்ணன் நாயகியின் மேல் காட்டும் அலட்சியத்தால் வந்த ஏமாற்றத்தையும், ஆவலையும், அவமானத்தையும் மாற்றி மாற்றி வெகு அழகாகச் சித்தரித்தார் அவந்தி. வழுவூர்ப் பாணியில் நடையும், நிருத்தமும் அவந்தியிடம் மெருகோடு தோன்றிப் பரிமளித்தன.

விறுவிறுப்பான நாட்டியமும், சிலைபோன்ற உறைவுமாக அவந்தியின் மாறுபட்ட திறன்களை 'ஆனந்தக் கூத்தாடினார்' (ரசிகப்ரியா) பாடல் வெளிக்கொணர்ந்தது. சீதையுடனான ராமனின் திருமணக் காட்சியை துளசிதாசர் பஜனைப் பாடலான 'ஸ்ரீ ராமச்சந்த்ர க்ருபாலு' (ராகமாலிகை) கண் முன்னே நிகழ்த்திக் காட்டி யது. இதிலே வெவ்வேறு தேச மன்னர்கள் வில்லைத் தூக்க முயன்று தோற்பதைக் காட்டு கையில் ஹாஸ்யச் சுவை விஞ்சி நின்றது. இறுதியாக நளினகாந்தியில் அமைந்த தில்லானாவும் மிகச் சிறப்பு.

குரு ஷோபா நடராஜன் நட்டுவாங்கம் செய்து குரலிசையும் வழங்க, பி. ரமா (இணைந்து குரலிசை), வி.கே. ராமன் (புல்லாங்குழல்), ஜெய்ஸ்ரீ பிரசாத் (வீணை) மற்றும் ஜனார்த்தனன் (மிருதங்கம்) ஆகியோர் உடன் இசைத்தனர்.

-

© TamilOnline.com