மீண்டும் பணி கிடைக்குமா?
கடந்த 1997ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்ற சாலைப் பணியாளர்கள் 9813 பேரை அப்போதைய தி.மு.க அரசு நியமித்தது. பின்பு 2001ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததும் அரசின் செலவை குறைக்கும் வகையில் அவர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.

அரசின் இந்த முடிவை எதிர்த்துத் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறைப் பணி யாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் எம். மாரிமுத்து உள்படப் பலர் தமிழ்நாடு நிர்வாகத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். அம்மனுவைத் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல் அரசின் கொள்கை முடிவில் தலையிடமுடியாது என்று தீர்ப்புக் கூறியது. இத்தீர்ப்பை எதிர்த்து அவர்கள் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதி பி.கே. மிஸ்ரா மற்றும் எப்.எம். இப்ரஹிம் கலி·புல்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

விசாரணையின் முடிவில் சாலைப் பணியாளர்களைப் பணி நீக்கம் செய்த போது தொழிற்தகராறு சட்டத்தின் விதிகளை அரசு பின்பற்றவில்லை என்றும், இதைப் பற்றி நிர்வாகத் தீர்ப்பாயம் தனது விசாரணையின் போது கவனிக்கவில்லை என்றும் கூறி 9813 பேரை அரசு வேலை நீக்கம் செய்தது வெளியிட்ட உத்தரவு சட்டவிரோதமானது என்று கூறி அந்த உத்தரவை ரத்து செய்தது. மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட சாலைப்பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் அரசுப் பணியில் 3 மாதங்களுக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில் தமிழக அரசு சாலைப் பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்காமல் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முனைவதாகத் தெரிகிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com