சிலிர்க்க வைத்த சிலப்பதிகாரம்
சிலப்பதிகார நாட்டிய நாடகம் செப்டம்பர், 2004 அன்று டெட்ராய்ட், மிச்சிகன் மில்லெனியம் திரையரங்கில் நடைபெற்றது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாத்திரங்களை நம்முன் உயிருடன் உலாவவிட்ட கனிமொழி, ஒன்பான் சுவைகளையும் தன் குரல் மூலம் வெளிக்கொணர்ந்த பாம்பே ஜெயஸ்ரீ, நகரமே தீப்பற்றி அழியும் அற்புதம் உட்பட அனைத்துக் காட்சிகளுக்கும் அரங்கம் அமைத்த இளங்கோ, பாத்திரங்களாகவே மாறி நம்மைச் சிலப்பதிகார காலத்திற்கு அழைத்துச் சென்ற நாட்டியத் தாரகைகள், சிகரமாக இத்தனைத் திறமைகளையும் ஒருங் கிணைத்த நரேந்திரன், தயாரிப்பாளர் உமாகணேசன் - இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மதுரை மாநகரத்து வணிகர் தெருவை அப்படியே அரங்கத்திற்குக் கொண்டு வந்தது அற்புதம். பூ விற்கும் பெண் ஒருபுறம், பாம்பாட்டி மறுபுறம், துணி வணிகம், இடையே குறுக்கும் நெடுக்கும் பரபரப்பாக வாங்கி விற்கும் பெண்கள், இடையில் மிரளமிரள வேதனை தேக்கிய முகத்துடன் கோவலன், அருகே பொற்கொல்லன்!

ஒவ்வொரு உணர்ச்சிகரமான கணத்திலும் இசையும், பாடலும், பாவமும், நடிப்பும் போட்டி போட்டுக் கொண்டு காண்பவரை மலைக்க வைத்தன. பெண்மையின் பெருமையை உணர்த்த வந்த காப்பியம் கண்ணகி காப்பியம். தமிழர்களின் பெருமையை உலகெங்கும் நிலை நாட்டப்போவது சிலப்பதிகார நாட்டிய நாடகம்.

உமையாள்முத்து

© TamilOnline.com