'பரம்பரா' - குருவுக்கு அஞ்சலி
செப்டம்பர் 19, 2004 அன்று சங்கல்பா நடன அறக்கட்டளையை (·ப்ரீமாண்ட்) நடத்திவரும் நிருபமா வைத்தியநாதனும், அர்ப்பணா நடனக் குழுமத்தின் (இர்வைன்) தலைவரான ரம்யா ஹரிசங்கரும் இணைந்து தமது குருவான சுவாமிமலை ராஜரத்தினம் அவர்களுக்கு 'பரம்பரா' என்ற நிகழ்ச்சியைக் காணிக்கையாய்ச் சமர்ப்பித்தனர். இரண்டு வெவ்வேறு நடனப் பயிற்சிக்கூடங்கள் இணைந்து செய்தது என்ற முறையிலும் இந்நிகழ்ச்சி மாறுபட்டதே.

சங்கல்பாவின் மாணவிகளான மீரா ஜெயராமன், ப்ராசி ராஜே, சாயா ராஜீவ் மற்றும் ரோஷினா ரமேஷ் ஆகியோர் வழங்கிய புஷ்பாஞ்சலியுடன் (ராஜரத்தினம் அவர்கள் இயற்றியது) நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் தொடர்ந்தது கணேச பஞ்சரத்னம். பாரதி நூற்றாண்டுவிழாவுக்காக 1982-இல் ராஜரத்தினம் அவர்கள் 'கண்ணன் மனநிலையை' என்ற பாடலை வர்ணமாக இசை மற்றும் நடனம் அமைத்திருந்தார். இதற்கு நிருபமா வைத்தியநாதன் செய்த ஜதிக் கோர்வை மனத்தைக் கவர்ந்தது.

அடுத்து அர்ப்பணாவின் அஹிலா குணசேகரம், ஆரத்தி வர்மா, அமிதா ஷேத் மற்றும் ஷிவானி ரெட்டி 'போ சம்போ'விற்குச் சிறப்பாக நடனமாடினர். தொடர்ந்தது அன்னமாச்சார்யாவின் 'இந்தரிகி அமயம்பு' என்ற தசாவதார கிருதி. இதற்கான அபிநயம் வெகு நேர்த்தி. நிறைவாக ரம்யா ஹரிசங்கர் மதுவந்தி ராகத் தில்லானாவிற்கு ஆடிய நடனம் வழுவூர் பாணியின் சிறப்பு அம்சங்களைத் தெளிவாக வெளிக்கொணர்ந்தது. இதே நிகழ்ச்சியை செப்டம்பர் 12 அன்று இர்வைனில் நடத்தியபோது குரு ரம்யா வர்ணமும், குரு நிருபமா தில்லானாவும் ஆடினார்கள்.

சுவாமிமலை சுரேஷ் (நட்டுவாங்கம் மற்றும் குரலிசை), ஹரிபாபு (மிருதங்கம்), முத்துக்குமார் (குழலிசை) ஆகியோர் சிறப்பாகப் பின்னணி வழங்கினர். கடல்கடந்து வந்தபோதும் குரு-சிஷ்ய உறவின் உன்னதத்தை மறவாது நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி இளந்தலைமுறையினருக்கு ஒரு முன்னோடியும் ஆகும்.

© TamilOnline.com