மூன்று குழந்தைகளுடன் தலைதீபாவளி!
என்னுடைய திருமணம் 1967 மே மாதம் திருவண்ணாமலை ரமண நகரில் நடந்தது. திருமணம் முடிந்தவுடனேயே கணவருடன் மேற்கு வங்காளத்தில் அஸன்சால் என்கிற இடத்திற்குச் சென்றுவிட்டேன். அங்குதான் என் கணவர் வேலை செய்துகொண்டிருந்தார். தலை தீபாவளிக்குப் பெற்றோர்களின் அழைப்பை ஏற்க முடியாமல் வெகுதொலைவில் இருந்தோம். வேலை மாற்றங்களால் டில்லி, கான்பூர், பம்பாய், கல்கத்தா என்று வட இந்தியாவிலேயே இருந்துவிட்டோம். 3 குழந்தைகளும் பிறந்தனர். 1980ல் என் கணவருக்குச் சென்னைக்கு மாற்றல் ஆயிற்று. அங்கிருந்து மூன்றரை மணி நேரப் பயணத்தில் திருவண்ணாமலை. அந்த வருட தீபாவளிக்கு என் பெற்றோர்களின் நீண்ட நாள் அன்புக் கட்டளையை நிறைவேற்றும் பாக்கியம் கிடைத்தது. நாங்கள் மூன்று குழந்தைகளுடன் திருவண்ணாமலை சென்றோம்.

தோரணங்களாலும், கோலங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த எங்கள் வீடு எங்களை வரவேற்றது. விதவிதமான இனிப்புகளும் விருந்து உணவுமாக செய்து எங்களை ஆச்சர்யத்திலும், ஆனந்தத்திலும் மூழ்கவைத்தனர் அம்மாவும், பெரியம்மாவும். உக்காரை என்கிற ஸ்பெஷல் அயிட்டத்தை அத்தை செய்திருந்தார்கள்.

''மூன்று குழந்தைகளுடன் தலைதீபாவளி கொண்டாடுகிற முதல் தம்பதி நீங்கள்தான். அமோகமாக வாழ வேண்டும். எங்கள் அன்பாசிகளும், வாழ்த்துகளும்' என்று நண்பர்களும், உறவினர்களும் வாழ்த்தி ஆசிர்வதித்தனர். 13 வருடப் பழைய மாப்பிள்ளையான என் கணவர் புதுமாப்பிள்ளை போல வெடிவெடித்து ஜமாய்த்துவிட்டார். அப்போது 5 வயதாக இருந்த என் மூன்றாவது பிள்ளைக்கு இவ்வருடம் தலைதீபாவளி.

மங்களம் கல்யாணம்

© TamilOnline.com