சீதாப்பாட்டியுடன் தீபாவளி
தீபாவளி என்றாலே எனக்குச் சீதாப்பாட்டி நினைவுதான் வரும். திருச்சியில் ஆசிரியை வேலை பார்த்துவந்த அவர் தனது மூன்று பேத்திகளுக்கும் நிறையப் பட்டாசு, மத்தாப்பு, பலகாரங்களோடு ஒவ்வொருவருக்கும் குறைந்தது 5 வகை ஆடைகளுடன் ஒரு வார விடுமுறையில் இரண்டு நாட்கள் முன்பே சென்னை வந்துவிடுவார்.

அப்பா ஐ.நா. பணியில் சவுதியில் இருந்தார். அம்மாவும், நாங்களும் அண்ணா நகரில் உள்ள சொந்தவீட்டிற்கு (திருமணமாகி வேறு வீடு சென்ற பெண்கள் நான் கட்டிய வசதியான வீட்டில் எப்போது இருப்பது என்ற அப்பாவின் ஆசைக்காக) தீபாவளிக்கு ஒருவாரம் முன்பு வருகிறோம். நாங்கள் சென்னையிலேயே வேறிடத்தில் குடியிருந்தோம்.

அந்த வருடம் தீபாவளிக்கு பாட்டி இல்லாத குறையுடன் காலெடுத்து வைத்தோம். எங்களுடன் வந்த எங்கள் குடும்ப நண்பர் ராஜம், ''பார்த்தீங்களா அதிசயத்தை! உங்கள் சீதாப்பாட்டி காவல் மரமாக உங்கள் வீட்டுவாசலில் பழங்களுடன் உங்களை வரவேற்கிறார்கள்'' என்றார். தென்னையும், மாமரமுமே நிறைந்த எங்கள் வீட்டில் சீதாப்பழ மரத்தை நாங்கள் வைக்கவேயில்லை. முன்பு குடியிருந்தோரைக் கேட்டதற்கு "நாங்களும் வைக்கவில்லை. ஒருவேளை நாங்கள் சாப்பிட்ட பழத்தின் விதைகள் தன் வாக்கில் முளைத்துப் பெரிதாகியுள்ளதோ என்னவோ. ஆச்சரியமாக இருக்கிறது" என்றார்கள். நம்மிடம் பெரிதும் பாசம் கொண்டவர் மறைந்த பின்னும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார் என்ற ஆறுதலுடன் சீதாப்பாட்டிக்குப் பட்டுத் துணிகட்டி, பலகாரம் படைத்து பூஜை செய்து மரத்தின் பக்கத்திலேயே வாண வேடிக்கைகளுடன் விளையாடி தீபாவளி கொண்டாடினோம்.

டாக்டர் ஜோதி விஜயராணி

© TamilOnline.com