மஹீதா பரத்வாஜ் பரதநாட்டியம்
மார்ச் 31, 2007 அன்று, உதவும் கரங்களுக்கு நிதி திரட்ட 'நிருத்ய பாலஸ்ரீ' மஹீதா பரத்வாஜ் ஒரு பரநாட்டிய நிகழ்ச்சியை கிரீன்டிரெய்ல்ஸ் யுனைடெட் மெதாடிஸ்ட் சர்ச் வளாகத்தில் (செஸ்டர்ஃபீல்டு, மிசெளரி மாநிலம்) வழங்கினார்.

திருமதி ஜென்னிஃபர் ஸ்போர் நல்வரவு கூற, பரத்வாஜ் தம்பதியினர் அறிமுகம் செய்ய நிகழ்ச்சி தொடங்கியது. 'உதவும் கரங்க'ளின் சேவைகளை பத்மினி நாதன் அவர்கள் (தலைவர், உதவும் கரங்கள் யு.எஸ்.ஏ.) விரித்துரைத்தார்.

தற்போது 11 வயதாகும் மஹீதாவுக்கு 6ஆம் பிறந்தநாளன்று உதவும் கரங்களின் அறிமுகம் கிட்டியது. அதன் சேவைகளால் ஈர்க்கப்பட்ட மஹீதா, அநாதை இல்லத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பைத் தனது குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் ஏற்றுக் கொண்டார். மூவரில் இருவர் மஹீதா மற்றும் அவர் தங்கை மேக்னா அடங்குவர். மஹீதாவும் மேக்னாவும் ஆண்டுதோறும் கைச்செலவில் சிக்கனம், பிறந்தாள் பரிசுக்கு பதிலாக வெகுமானம், பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் கிடைக்கும் நன்கொடை என்று ஒல்லும் வகையெல்லாம் ஓவாது சேமித்து ஒவ்வோர் ஆண்டும் வழங்கி வருகின்றனர்.

ஆண்டுதோறும் மஹீதா டிசம்பர்/ஜனவரி மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் சென்னை இசை மற்றும் நாட்டிய விழாக்களில் பங்கேற்று நிகழ்ச்சிகள் வழங்கத் தவறுவதில்லை. நாட்டியத்துக்கு 'நிருத்ய பாலஸ்ரீ' விருதையும், இசைக்கு 'நாதபாலஸ்ரீ' விருதையும் பெற்றவர் மஹீதா. குரு சுதா சீனிவாசன் அவர்களிடம் பரதக்கலையைப் பயின்று வருகிறார்.

அவரது அழகிய தோற்றத்தைப் போலவே, நளினம், பாவனை, முத்திரைகளுடன் கூடிய அவரது நாட்டியமும் இணையற்றதாக இயங்கியது. நாட்டிய நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சுருக்கமான ஆனால் தெளிவான விளக்கம் கொடுத்தார். விநாயகர் ஆராதனையில் தொடங்கி, வர்ணம், சிவதாண்டவம் எனத் தொடர்ந்து தில்லானாவுடன் முடிவுற்றது நாட்டிய நிகழ்ச்சி. ஒவ்வொரு உருப்படிக்கும் முன் அதன் பின்புலம் மற்றும் பொருளை மஹீதாவின் அன்னை மைதிலி பரத்வாஜ் எளிமையாக எடுத்துக் கூறினார். பரத்வாஜ் தம்பதியினரின் நன்றியுரையுடன் விழா நிறைவேறியது.

அன்றைய மாலை நாட்டிய நிகழ்ச்சியில் திரட்டப்பட்ட தொகை $3700ஐயும் விஞ்சியது. அது முழுதும் உதவும் கரத்துக்கு ஈயப்படும். உதவும் கரங்கள் பற்றி மேலும் அறிய: www.myhelpinghands.org எனும் வலைத்தளத்தைப் பாருங்கள்.

© TamilOnline.com