தமிழ்நாடு அறக்கட்டளை: அறிந்து கொள்ள வேண்டியவை
அமெரிக்கத் தமிழர்கள் தாம் பிறந்த மண்ணுக்கு ஈதல் வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு 1974-ல் தொடங்கப் பட்ட அமைப்பே தமிழ்நாடு அறக்கட்டளை (Tamil Nadu Foundation, TNF). தமது 33ஆவது ஆண்டு விழாவை 2007 ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய நாட்களில் சிகாகோ தமிழ்ச் சங்கத்துடனும் Association of Tamilnadu Professonals உடனும் இணைந்து கொண்டாடு கிறார்கள்.

கடந்த இரண்டு வருடங்களாக அறக் கட்டளையின் தலைவராகப் பணி புரிபவர் ஃபுளோரிடா மாநிலத்தில் வசிக்கும் இதய நிபுணரான டாக்டர் பி. சொக்கலிங்கம். இரண்டு முறை ஃபுளோரிடா மாநிலத்தில் தமிழர் விழாவைச் சீராக நடத்திய பெருமை இவருக்கு உண்டு. இந்த ஆண்டு இவர் அமெரிக்கத் தமிழ் மருத்துவர் கழகத்தின் (ATMA) தலைவரும் ஆவார். இதற்கு முன்னர் நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றி
இருக்கிறார். இவருடன் பேசிய போது:

அறக்கட்டளையின் குறிக்கோள்கள் என்னென்ன?

தமிழகத்தில் ஜாதி, மதம், அரசியல் நோக்கம் இல்லாத கல்வி மற்றும் சமுதாய நலத்திட்டங் களுக்குப் பொருள் உதவி செய்வதே அறக் கட்டளையின் நோக்கம். இதன்படி 400க்கும் மேற்பட்ட திட்டங்களை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் செயலாக்கியிருக்கிறோம்.

புதிய தலைமுறைத் தமிழர்கள் TNF மூலம் எப்படித் தமிழகத்துக்கு உதவலாம்?

தாம் வாழும் ஊர்களில் TNFகிளைகள் மூலம் அமெரிக்கா மற்றும் தமிழக வரிவிலக்கு பெறக்கூடிய பொருளுதவியை அவர்கள் செய்யலாம். அவர்களது நகரங்களில் கிளைகள் இல்லாவிட்டால் அவற்றைத் தொடங்க உதவலாம். பிறந்த ஊருக்கோ, படித்த பள்ளிக்கோ அது போன்ற பொதுநலத் திட்டங்களுக்கோ உதவ விரும்பினால் அறக் கட்டளையின் ஆயுள் உறுப்பினராகி அவர்கள் விரும்பும் திட்டங்களை நிறைவேற்றலாம். இதற்கான விவரங்கள் எமது infusa.org இணையதளத்தில் உள்ளன.

சில கிளைகளின் செயல்பாடுகளைப் பற்றி சொல்லுங்களேன்...

ஃபிலடெல்ஃபியா, டெலவர் மற்றும் தெற்கு ஜெர்சி கிளைகள் ஆண்டுதோறும் ஈகைப் பெருவிழா நடத்த முடிவு செய்து, சென்ற வருடம் சீர்காழியில் புறக்கணிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு வாழும் இடம் வாங்க 20 ஆயிரம் டாலர்கள் அனுப்பி வைத்தது. மில்வாக்கி கிளை தமிழகத்தில் கண்பார்வை இழந்தோரின் கல்விக்கும், போலியோ நோயாளிகளின் அறுவை சிகிச்சைக்கும் 15 ஆயிரம் டாலர் சேர்த் துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கண்ணதாசன் நற்பணி மன்றத்துடன் டாலஸ் மாநகரில் கவியரசரின் எண்பதாம் ஆண்டு விழாவைக் கொண்டாடி நிதி திரட்டினோம். ஹூஸ்டன் கிளை தமிழக கிராமப்புறங்களில் Play Pump திட்டத்தின் மூலம் குழந்தைகள் விளையாடவும் அதன் மூலம் கிராமங்களுக்கு தண்ணீர் கிடைக்கவும் வழி செய்ய முயற்சி எடுத்து வருகிறது. இண்டியானாபொலிஸ் கிளை எஸ்.பி.பி. இசை நிகழ்ச்சி மூலம் அறக்கட்டளையின் திட்டங்களுக்கு உதவி செய்துள்ளது.

உங்கள் விருப்பம் என்ன?

வரும் விழாவை மிகச் சிறப்பாகச் செய்வதுடன், இன்னும் பல தமிழ்ச் சங்கங்களுடன் கைகோர்த்து வெவ்வேறிடங் களிலும் நமது வருடாந்திர விழாக்களை நடத்த வேண்டும் என்பதுதான்.

சோமலெ சோமசுந்தரம்

© TamilOnline.com