குளிர்கால நோய்கள் சில......
கண்ணில் நீர் பெருகும், அழுகையல்ல;
மூச்சு உள்ளிழுக்கும், முனகலல்ல;
அது என்ன?
தோலெல்லாம் செதிலாகும், மீனல்ல;
சொறியவைக்கும், படையல்ல; அது என்ன?

என்ன விடுகதைக்கு விடை தெரிய வேண்டுமா? மேலே படியுங்கள். அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மக்களுக்கென்று சில பிரத்யேகமான உடல் உபாதைகள் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்கவை வறண்ட தோலும், ஒவ்வாமையும் ஆகும்.

வறண்ட தோல் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை. ஆனால் இங்கு குளிர் காலத்தில் ஈரப்பசை குறைவாக உள்ளதால் தோல் வறண்டு அதனால் அரிப்பு ஏற்படுகிறது. இது எல்லா வயதினரையும் பாதிக்கலாம். பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை அனைவரையும் பாதிக்கலாம். குறிப்பாகக் கால் முட்டியின் பின் புறம், கை முட்டியின் உள்புறம், புறங்கை போன்ற பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டு இரணமாகலாம். இதனால் ஏற்படும் தடிப்பு Atopic dermatitis அல்லது Eczema எனப்படும். இந்தப் பாதிப்பு குளிர் காலங்களில் மிக அதிகமாகவும் கோடையில் குறைவாகவும் காணப்படும். இந்த நோய் தீவிரமானால் நிரந்தரமாக அரிப்பு ஏற்படலாம். இதற்குச் சில தீர்வுகள் உள்ளன.

1. மிகவும் சூடான தண்ணீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

2. 15-20 நிமிடத்திற்குக் குறைவான நேரத்தில் குளிப்போர் குறிப்பாக வெதுவெதுப்பான நீரிலேயே குளிக்க வேண்டும். குழந்தைகளையும் அவ்வாறே பழக்க வேண்டும்.

3. ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் குளிப்பதும் நல்லதல்ல. சென்னையின் கடும் வெயில் இங்கு இல்லாத போதும் ஒரு சிலர் காலை, மாலை இருவேளையும் குளிக்கும் பழக்கம் கொண்டிருந்தால் அதை மாற்றிக் கொள்வது நல்லது.

4. குளிக்கும் போது குறைவான அளவு சோப் தேய்த்துக் கொண்டால் போதுமானது. தீவிரம் குறைவான Dove போன்ற சோப்பை உபயோகிப்பது நல்லது. காலம் காலமாக ஹமாம் உபயோகித்து வந்த பாட்டிமார்கள் இந்த ஊரிலேயும் அதையே உபயோகிக்க விரும்பலாம். தோல் வறண்டு போகுமேயானால் அமெரிக்காவில் இருக்கும் வரை ஹமாமைக் காசியில் விட்டதாக எண்ணிக் கொள்வது நல்லது.

5. குளித்த உடனேயே ஈரத்துடன் baby oil அல்லது olive oil தேய்த்து, பின்னர் காய்ந்த துண்டினால் ஒத்திக் கொள்வது நல்லது. எண்ணெயைத் தோல் உறிஞ்சிக் கொள்வதால் துணிகளில் ஒட்டுவதில்லை.

6. இதற்கும் அடுத்த படியாக petroleum jelly அல்லது aquaphor போன்ற ஈரப்பசை அதிகமாக்கும் களிம்புகளைத் தடவிக் கொள்வது சிறந்தது.

மேற்கூறியவற்றை அன்றாடம் செய்து வந்தால் வறண்ட தோல் நீங்கி விளம்பர அழகி போல் பிரகாசிக்கலாம்! இது முக்கியமாகக் குழந்தைகளின் தோல் வறண்டு போகாமல் இருக்கக் கடைப்பிடிக்க வேண்டும். அமெரிக்காவில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தாலும் ஆசிய மக்களின் மரபணுக்கள் இருப்பதால் இவர்களின் தோல் இந்த மண்ணின் குணாதிசயங்களுக்குப் பழகச் சற்று காலமாகும்.

மேற்கூறியவை யாவும் தினமும் செய்தாலும் அரிப்பு ஏற்பட்டு, தோல் சிவந்து, தடிப்பு உண்டாகுமேயானால் மருத்துவரை நாடுவது நல்லது. அப்படி உருவாகும் தடிப்பிற்கு Hydrocortisone என்ற களிம்பு அளிக்கப்படும். இது பலவித வீரியத்தில் கிடைக்கின்றன. நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருந்தின் வீரியம் நிர்ணயிக்கப்படும். இந்தக் களிம்பை அளவுக்கு அதிகமாக உபயோகித்தால் தோல் சுருங்கித் தன் செயல்திறனை இழக்க நேரிடலாம்.

ஒவ்வாமையினால் (allergy) ஏற்படும் தொல்லைகள் பலவகைப்படும். ஒரு சிலருக்கு வசந்த காலத்தில் அதிகமாய் இருக்கும் மகரந்தத்தினால் (Pollen) தும்மல், கண்களில் இருந்து நீர் பெருகுதல், தலை வலி போன்றவை ஏற்படலாம். சில குழந்தைகளுக்கு குளிர் காலத்திலும் இது தொடரலாம். நோய் கடுமையாகும் பொழுது மூச்சு விடவும் கடினமாய் இருக்கலாம். Wheezing என்று சொல்லப்படும் இழுப்பு நோய் தாக்க நேரிடலாம். பெரும்பாலும் இதை Reactive Airway disease என்று மருத்துவர் வர்ணிப்பர். இது சிறு பிராயத்தினரைக் கடுமையாக தாக்குகிறது.

இந்த இழுப்பு அடிக்கடி ஏற்பட்டு எல்லாக் காலகட்டத்திலும் தொடருமானால் ஆஸ்த்மா என்று சொல்லப்படுகிறது. இதற்குப் பல வகை மருந்துகள் உள்ளன. தீவிரம் குறைவாக இருக்கும் போது Albuterol என்ற மருந்தை மூச்சில் உள்ளிழுக்க (Inhale) வழங்குப்படும். தீவிரம் அதிகமானால் ஸ்டீராய்டு (Steroid) மருந்தை மூச்சில் உள்ளிழுக்கவும் அதற்கும் அடுத்த படியாக மாத்திரை வடிவிலும் வழங்குவர். குறிப்பாக இந்த ஸ்டீராய்டு மாத்திரைகளுக்குப் பல பக்க விளைவுகள் இருப்பதால் தேவைப்பட்டால் மட்டுமே உபயோகிப்பது நல்லது. சில சமயங்களில் ஸ்டீராய்டு மருந்தை மிகவும் குறைந்த அளவில் மூக்கு வழி இழுக்கும் முறை கையாளப்படலாம். இது Flonase அல்லது Nasonex என்று பல பெயர்களில் கிடைக்கும். இதை வசந்தம் மற்றும் குளிர் காலத்தில் மட்டும் உபயோகிக்கும்படி மருத்துவர் அறிவுரை கூறுவதுண்டு.

ஒவ்வாமையின் இன்னொரு விதம் ஒரு சில உணவுப் பொருட்களுக்கானதாகும். இதில் குறிப்படத்தக்கவை:

1. வேர்க்கடலை மற்றும் பாதாம், பிஸ்தா, முந்திரி வகைகள் 2. பால் புரதம் 3. முட்டை 4. சோயா புரதம் 5. மீன் மற்றும் நண்டு வகையறாக்கள்.

இந்த விதமான உணவுப் பொருட்களின் ஒவ்வாமை சிறு வயதிலேயே கண்டுபிடிக்கப்படுகிறது. இவர்களுக்கு இந்த உணவுகளைச் சிறு அளவில் உண்டாலே உடலில் தடிப்பு, அரிப்பு ஏற்படலாம். கண்கள் வீங்கி, உதடுகள் வீங்கலாம். தீவிரம் அதிகமானால் மூச்சுக்குழாய் அடைபட்டு உயிருக்கு அபாயம் ஏற்படலாம். இந்த அபாய நிலை Anaphylaxis என்று சொல்லப்படும். ஒவ்வாமை உடையவர்கள் 'Epipen' என்று சொல்லப்படும் மருந்து ஊசியினைக் கைவசம் எப்போதும் வைத்திருப்பது நல்லது. இந்த ஊசியின் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. குறிப்பாகப் பதின்ம வயதினரும் இளம் வயதினரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். எந்த காலகட்டத்திலும் இந்த உணவுப் பொருட்களை உண்ணுவதை தவிர்க்க வேண்டும். இதில் பால் புரதம், முட்டை, மற்றும் சோயா புரதம் ஒவ்வாமை காலப்போக்கில் தானாகவே குணமடையலாம். ஆனால் வேர்க்கடலை மற்றும் மீன் வகை ஒவ்வாமை உடையவர்களில் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவானரே குணமடையும் வாய்ப்புக்கள் உள்ளன. ஒவ்வாமை மருத்துவரிடம் தோலில் மருந்து தடவிப் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் எந்தப் பொருட்களுக்கு எல்லாம் ஒவ்வாமை இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

இப்படிப்பட்ட ஒவ்வாமை நோய் இருப்பதை இந்தியாவில் இருந்தவரை அறிந்ததே இல்லையே என்று பலர் முணுமுணுக்கலாம். இந்தியா மற்றும் பல ஆசிய நாடுகளில் இந்தக் கடலைகளில் உள்ள புரதம் வேறு விதமாகக் கையாளப்படுகிறது. அமெரிக்க நாட்டில் தயார் செய்யப்படும் இனிப்பு மற்றும் பல உணவுகளில் இந்தப் புரதம் வேறு விதமாகக் கையாளப்படுவதால் ஒவ்வாமை அதிகம் காணப்படுகிறது. இதைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. முழுமையாக விவரங்கள் அறியும்வரை ஆசிய உணவுகளிலும் இந்தக் கடலை கலக்கப்பட்டிருந்தால் தவிர்ப்பதே நல்லது. ஒருமுறை இந்தப் பொருட்களை உண்டுவிட்டால் மேலும் ஒவ்வாமை கூடும் வாய்ப்புகள் உள்ளன. இதை ஆங்கிலத்தில் 'sensitivity' என்று சொல்வர். அடுத்தமுறை அதே உணவை உண்ணும் போது ஒவ்வாமையின் தீவிரம் கூடுகிறது. இதைப் பற்றிய அறிவும், கவனமும் மிக மிக அவசியம்.

வறண்ட தோல், ஒவ்வாமை, ஆஸ்துமா அல்லது reactive airway disease ஆகிய யாவும் தொடர்புடைய நோய் வகைகள். ஆதலால் சிலருக்கு இவையாவும் ஒருசேர ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மேலும் இந்த ஒவ்வாமையினால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாமாதலால் இதைப் பற்றிய விவரங்களைப் பள்ளிகள், காப்பகங்கள், அலுவலகங்களில் தெரியப்படுத்த வேண்டும். மேற்கூறிய அபாய நிலையை ஒரு முறையேனும் எட்டியிருந்தால் மருத்துவ எச்சரிக்கைக் காப்பு (Med alert bracelet) கையில் அணிந்து கொள்வது பாதுகாப்பானது. குறிப்பாக விவரம் சொல்லத்தெரியாத குழந்தைகளுக்கு இதை அணிவிப்பதின் மூலம் அவசர நிலை ஏற்படும்போது மருத்துவத் துறையினர் தக்க நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள முடியும்.

இந்த நோய்கள் பற்றி மேலும் குறிப்புகள் அறியப் பல வலைதளங்கள் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்கவை www.foodallergy.org மற்றும் www.eczema.org

மரு. வரலட்சுமி

© TamilOnline.com