நவம்பர் 2023: வாசகர்கடிதம்
அக்டோபர் 'தென்றல்' இதழில் பாரதத்தின் வளர்ச்சியைச் சரியாக எடுத்துக் காட்டியுள்ளீர்கள். நேர்காணல் பகுதியில் வெளிநாடு சென்று திரும்பினாலும், தனது மக்களுக்கு எப்படி உதவ முடியும் என்ற உத்வேகத்துடன், தான் பிறந்த ஊருக்கும், தாய் நாட்டிற்கும், தனது மக்களின் கல்வியறிவு வளர்ச்சிக்கும், இலவசக் கல்வியை அனைத்து கிராம மக்களுக்கும் அளித்து வரும் நாகராஜன் பிச்சுமணி அவர்களது நேர்காணல் சிறப்பு.

ஐ.நா. சபை ஏற்பாடு செய்திருந்த நிலைத்த வளர்ச்சி இலக்குகளை வளர்ப்பதற்கான பணிகளைப் பற்றிய நிகழ்வில், 'சுகாதாரம், நலவாழ்வு, காலநிலைமாற்றம் ஆகியவற்றில் சிறுதானியங்களின் பங்கு' என்ற தலைப்பில், எதிர்காலத்தின் தீர்வு என்ற தலைப்பில்,உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனனி சிவகுமார் அவர்களின் பேச்சு மிகமிகச் சிறப்பாக இருந்தது.காலநிலை மாற்றத்தின் காரணமாக, ஏற்படும் உணவு பாதுகாப்பின்மை போன்ற விளைவுகளை எதிர்கொள்ளப் புதிய வழிகளைத் தேடும் இந்தச் சமயத்தில் ஆரோக்கியமான உணவுகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய சிறுதானியங்கள் போன்ற மாற்றுப் பயிர்களை கருத்தில் கொள்வது முக்கியம். இந்த நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது ஜனனியின் பேச்சு. இந்த இளம் சாதனையாளரை மேலும் உயர வாழ்த்துவோம்.

மேலோர் வாழ்வில் பகுதியில் பி.வி. நரசிம்ம சுவாமி அவர்களைப்பற்றிய விஷயங்களைத் தெரிந்துக் கொள்ள உதவியதற்கு மிக்க மகிழ்ச்சி. காந்தீய எழுத்தாளர் வரிசையில் பகீரதன் என்றும் நினைவில் இருப்பவர். அவரை நினைவில் கொண்டுவந்தமைக்கும் நன்றி.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

© TamilOnline.com