சை. பீர்முகம்மது
மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரும், இதழாசிரியருமான சை. பீர்முகம்மது காலமானார். மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் 1942ல் பிறந்தார். 1959ல் எழுத்துலகில் நுழைந்தார். 'வண்மணல்' (சிறுகதைத் தொகுப்பு), 'பெண் குதிரை' (நாவல்), 'கைதிகள் கண்ட கண்டம்', 'மண்ணும் மனிதர்களும்' (பயண நூல்கள்), 'பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்' (கட்டுரைகள்) போன்றவை இவரது முக்கியமான நூல்கள். 'மலேசியத் தமிழர்களின் வாழ்வும் இலக்கியமும்', 'திசைகள் நோக்கிய பயணங்கள்' என்னும் இவரது கட்டுரை நூல்கள் குறிப்பிடத்தகுந்தன.

மலேசியாவிலிருந்து வெளிவந்த 'உதய சக்தி' என்னும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மலேசியத் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் ஏற்பட வேண்டி உழைத்தார்.

மலேசியத் தமிழிலக்கியத்தை உலகத் தமிழிலக்கியத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கத்தில் 93 மலேசிய எழுத்தாளர்களின், 50 ஆண்டுச் சிறுகதைகளை 'வேரும் வாழ்வும்' என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாகத் தொகுத்தது இவரது வாழ்நாளின் முக்கியமான சாதனைப் பணியாகும். (மேலும் வாசிக்க)

எழுத்தாளர் சை. பீர்முகம்மது 26 செப்டம்பர் 2023 அன்று மலேசியாவில் காலமானார். அவருக்குத் தென்றலின் அஞ்சலி.

© TamilOnline.com