சாக்ரமெண்டோ தமிழ் மன்றம்: பொங்கல் விழா 2023
சாக்ரமெண்டோ தமிழ் மன்றம் 2023ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவை, பிப்ரவரி மாதம் 11-ஆம் நாள், உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற பாரதியின் வரிகளின்படி இயற்கையைப் போற்றவும், உழவர் பெருமக்களை வாழ்த்தவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்றுகூடி, ஆடிப்பாடி மகிழ, விமரிசையாக நடைபெற்றது.



பொங்கல் பானை வைத்தல், கோலப் போட்டி, சிறுவர்களுக்கான ஓவியப் போட்டி, உறி அடித்தல், சிறுவர் விளையாட்டுகள், பொங்கல் விருந்து, கலை நிகழ்ச்சிகள் யாவும் அந்த நாளை மறக்க முடியாததாக்கின. சிறப்பு விருந்தினராக வருகை தந்த திரு. ராஜா, திருமதி. பாரதி பாஸ்கர் ஆகியோர் கோலப் போட்டிக்கு நடுவர்களாக இருந்து சிறப்பித்தனர்.

விழாவின் சிறப்பு அம்சமாக, ராஜா அவர்கள் தலைமையில் 'மிகவும் சிறந்தது - கிடைப்பதை விரும்புவது, விரும்புவதை அடைவது' என்ற தலைப்பில் சுவையான பட்டிமன்றம் நடத்தப்பட்டது. இதில் பாரதி பாஸ்கர், 'நம் உழைப்பின் மூலம் நாம் விரும்பும் இலக்கை அடையலாம்' என்ற பேச்சு மிகவும் வரவேற்கத் தக்கதாக இருந்தது. அதேபோல் சாக்ரமெண்டோ சார்பில் வாதிட்ட அணியின் வாதங்கள் சிறந்த பாராட்டைப் பெற்றது.



விழாவையொட்டி முன்னரே நடத்தப்பட்ட திருக்குறள் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற சிறுவர் சிறுமியருக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சந்தியா நவீன்,
சாக்ரமெண்டோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com