சுனாமி நிவாரண நிதி: நித்யா வெங்கடேஸ்வரனின் நாட்டிய நிகழ்ச்சி
ஜனவரி 30, 2005 அன்று நித்யா வெங்கடேஸ்வரன் நிகழ்த்திய தனி பரதநாட்டிய நிகழ்ச்சி சான் ·பிரான்சிஸ்கோவின் மிஷன் பகுதியிலுள்ள ODC அரங்கத்தில் நடந் தேறியது. அரங்கு நிறைந்த இந்த நிகழ்ச்சியின் வருவாய் BAPS சுவாமிநாராயண் அமைப்பின் சுனாமி நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டது.

முத்திரை மற்றும் அபிநயத்துடன் ஒவ்வொரு உருப்படியையும் அறிமுகப்படுத்தினார் நித்யா. 'கோபியர் கொஞ்சும்', தாகூரின் 'சண்டாளிகா' ஆகியவற்றுக்கு அவரது சிற்பம் போலக் காட்டிய வடிவுகளும், தில்லானாவுக்கு அவரது பாதவேலை நுட்பமும், 'சிவ பஜனை'யில் அவரது பாவமும் வெகு சிறப்பாக அமைந்திருந்தன.

ஹ¤சேனி ராகத்தில் அமைந்த வர்ணம் நிகழ்ச்சியின் மகுடமாக அமைந்தது. தலைவன் வராதது குறித்த தலைவியின் ஏமாற்றம் மற்றும் பொறாமை, திருமாலின் அவதாரங்கள் இவற்றை நேர்த்தியாகச் சித்தரித்தார் நித்யா. ஜதிஸ்வரத்தின்போது இவரது பாதம் மரதளத்தில் மிருதங்கத்தோடு இணைந்து ஒலித்தது நிருத்தத்தின் உச்சம்.

தாகூரின் 'சண்டாளிகா'வை இவர் வழங்கிய விதம் குறிப்பிடத் தக்கது. சாதாரணமாக கதக் அல்லது ஒடிசியில் இது அபிநயிக்கப்படும். இது ஒரு தீண்டத்தகாதவராகக் கருதப்படும் பெண்ணின் கையிலிருந்து குடிநீர் ஏற்கும் ஒரு புத்த பிக்குவின் கதை. இதை பரதத்தில் அழகாக உருமாற்றி வழங்கினார்.

நித்யாவின் குருவான விஷால் ரமணி (நிறுவனர் மற்றும் கலை இயக்குனர், ஸ்ரீ கிருபா நடனக் குழுமம்) நடனத்தை வடிவமைத்திருந்தார். ஜாம்பவான்களோடு இளையோரும் பரதத்துக்குப் புதியோரும் வந்திருந்தாலும் அனைவரும் நடனத்தைச் சுவைக்கும் வண்ணம் இருந்தது நித்யாவின் திறம்.

மேற்கொண்டு விவரங்களுக்கு: www.shrikrupa.org/nitya_dance@yahoo.com

கோமதி சதாசிவன்,
சான் ·பிரான்சிஸ்கோ, கலி.

© TamilOnline.com