என்றும் தணியும் சென்னையில் தாகம்!
சென்னை நகரின் குடிநீர்ப் பிரச்சனை யைத் தீர்ப்பதற்காகத் தமிழக அரசு கிருஷ்ண நதிநீர் திட்டம், வீராணம் திட்டம், கடல்நீர் திட்டம், வீராணம் விரிவாக்கத் திட்டம் என்று பல திட்டங்களை தீட்டி, பல கோடிகளைச் செலவழித்து வருகின்றது.

கடந்த ஆண்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தாலும், சென்னை நகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைவாக இருந்தது. மூன்று பிரதான ஏரிகளிலும் போதிய நீர் வரத்து இல்லாததால் வரும் கோடையில் ஏற்படவிருக்கும் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்கத் தமிழக அரசு போர்க் கால நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது.

2001ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் புதிய வீராணம் திட்டத்தைத் தொடங்கியபோது பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வீராணம் பகுதியில் ஆழ் கிணறுகளை அமைத்து, குழாய்களின் மூலம் சென்னைக்குத் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. சென்ற ஆண்டு மழையில் வீராணம் ஏரி நிரம்பியதை அடுத்து, சென்னை நகருக்கு நேரிடையாகக் குழாய் மூலம் தண்ணீர் செலுத்தப்பட்டது. நகரின் குடிநீர்ப் பிரச்சனை ஓரளவுக்குச் சாமாளிக்கப்பட்டது. இதை அ.தி.மு.க அரசு வெற்றியாகக் கொண்டாடியதும் குறிப்பிடத் தக்கது.

ஒரே ஒரு திட்டத்தால் மட்டும் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்துவிடமுடியாது என்று கருதிய ஜெயலலிதா வீராணம் விரிவாக்கத் திட்டம் ஒன்றுக்கான அடிக்கல் நாட்டு விழாவைச் சமீபத்தில் நடத்தியுள்ளார்.

கொள்ளிடம் ஆற்றுப்படுகையிலிருந்து குறைந்த ஆழத்தில் உள்ள தண்ணீரை எடுத்து, சேத்தியாத்தோப்புக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து வீராணம் குழாய்கள் வழியே சென்னைக்குக் கொண்டு செல்லும் இத்திட்டத்திற்கு அப்பகுதி வாழ் விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ. 75 கோடி செலவில் 3 தடுப்பணைகள் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் அப்பகுதி விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று இதுதொடர்பான வழக்கு ஒன்றிற்கு உயர்நீதி மன்றத்தில் அரசு பதிலளித்துள்ளது.

வீராணம், கிருஷ்ணா, வீராண விரிவாக்கம் என்று கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய்க்கு மேல் சென்னை நகரின் மக்களின் குடிநீர்ப் பிரச்சனைக்குச் செலவிடுகிற அரசு ஏன் அதே 1000 கோடி செலவில் உருவாகக்கூடிய கடல் நீரைக் குடிநீராக மாற்றும் திட்டத்தைச் செயல்படுத்தக்கூடாது என்று கேள்வி எழுந்துள்ளது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com