தாமரைமணாளன்
தாமரைமணாளன் மிகச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தவர். திருநெல்வேலிக்காரராதலால் அந்த மாவட்ட வட்டார வழக்கு அவருக்கு மிகவும் அத்துப்படி. ஆனால், அதை விடவும் சிறப்பான அம்சம் என்னவெனில், அவர் நடையில் நக்கல், கிண்டல் ஆகியன ததும்பி வழியும் என்பதுதான். படிப்பவர் முகத்தில் புன்சிரிப்புத் தோன்றாமல் இருக்காது. மிகவும் மாறுபாடான அவரது எழுத்து நடை பிற எழுத்தாளர்களால் எளிதில் பின்பற்றப்பட முடியாத அரிய நடை" என்று பாராட்டுகிறார், ஜோதிர்லதாகிரிஜா. "புதுமைப்பித்தனுக்கு பிறகு இவரைப்போல் (தாமரைமணாளன்) அங்கதச் சுவையோடு எழுதுவதற்கு, இப்போதுகூட ஆளில்லை. வணிகப் பத்திரிகைகளுக்காக சிலசமயம் வளைந்து கொடுத்தாலும், இவரது நடையில் எள்ளல், துள்ளல், இலக்கிய நயம், யதார்த்தம், புரட்சி ஆகியவை உள்ளடங்கியிருக்கும். எல்லாத் துறைகளிலும் தன் எழுத்து வல்லமையை நிரூபிப்பவர்" என்கிறார், சு. சமுத்திரம்.

இப்படி சக எழுத்தாளர்கள் பலரது பாராட்டைப் பெற்றிருக்கும் தாமரைமணாளன், ஜூன் 19, 1935-ல், திருநெல்வேலியில் பிறந்தார். இயற்பெயர், ரா. பாஸ்கரன். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள செட்டிகுளம் இவரது சொந்த ஊர். உயர்கல்வியை முடித்த தாமரை மணாளனுக்கு அரசுப் பணி கிடைத்தது. இளவயது முதலே இவருக்கு எழுத்தார்வம் இருந்தது. நண்பரும் எழுத்தாளருமான எம்.கே. சங்கரன் இவரைக் கதைகள் எழுதத் தூண்டினார். ராணி இதழில் சில சிறுகதைகள், கட்டுரைகளை எழுதினார் தாமரைமணாளன். தாமரை புஷ்பத்துடன் திருமணம் நிகழ்ந்தது. எழுத்தின்மீது கொண்ட ஆர்வத்தால் அரசு வேலையை விட்டுவிட்டு எழுத்துலகில் நுழைந்தார். மனைவியின் பெயரையே புனைபெயராக்கி 'தாமரைமணாளன்' என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார். மணியன் ஆசிரியராக இருந்த ஆனந்தவிகடனில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார்.



உதவி ஆசிரியர் பணியுடன் கதை, கட்டுரைகளும் எழுதத் தொடங்கினார் தாமரைமணாளன். இவரது 'அழகு' என்ற தொடர் ஆனந்தவிகடன் இதழில் தொடராக வெளியானது. பின்னர் இது திரைப்படமாகவும் வெளிவந்தது.

தொடர்ந்து விகடனில் இவர் எழுதிய 'ஆயிரம் வாசல் இதயம்', 'ஆயிரம் எண்ணம் உதயம்', 'இடைவெளி' போன்ற தொடர்கள் பலரது பாராட்டைப் பெற்றன. கொத்தமங்கலம் சுப்பு, மணியன் உள்ளிட்ட பலரும் இவரது எழுத்துத் திறமையைப் பாராட்டி ஊக்குவித்தனர்.

மணியன் ஆனந்தவிகடனிலிருந்து வெளியேறிய போது தாமரைமணாளனும் விலகினார். மணியனின் 'இதயம் பேசுகிறது' இதழுக்கும், 'ஞானபூமி' இதழுக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார். கூடவே மணியன் வெளியிட்ட இதழ்களான 'இதயம் சிறுகதைக் களஞ்சியம்', 'மயன்' போன்ற இதழ்களின் ஆசிரியர் பொறுப்பிலும் பங்கேற்றார். 'இதயம் பேசுகிறது' இதழில் பல தொடர்களை, கட்டுரைகளை தன் நிஜப் பெயரிலும், புனைபெயரிலும் எழுதினார். 'நக்கீரன்' என்ற புனைபெயரில் அவர் எழுதிய கட்டுரைகள் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாயின. 500க்கும் மேற்பட்ட ஆலயங்களுக்குச் சென்று, அதுபற்றி ஞானபூமி இதழில், பொன். பாஸ்கர மார்த்தாண்டன் என்ற பெயரில் நிறைய ஆன்மிகக் கட்டுரைகளை எழுதினார்.

தாமரைமணாளனின் படைப்புகள்

நாவல்கள்
அழகு
ஆயிரம் வாசல் இதயம்
ஆயிரம் எண்ணம் உதயம்
ஆலய வாசல்
இடைவெளி
பொதிகை பூங்குயில்
அந்தப்புரம்
இதயவல்லி
இந்திரவிழா
தேன்மலைக்கன்னி
மேல் காற்று
மாதுளம் பூ
வடக்கே திரும்பும் காவேரி
சில்லுக்கருப்பட்டி மற்றும் பல

சிறுகதைத் தொகுப்புகள்
சிவில் சிங்கராயர்
அந்தரங்கத்தில் ஒரு சந்திப்பு
அருளோசை மற்றும் பல

நாடகங்கள்
தேவி பாரடைஸ் மற்றும் பல

கட்டுரை நூல்கள்
கரிசல் காட்டிலிருந்து ஒரு கர்மவீரர்


'இதயம் பேசுகிறது' இதழுக்குப் பின் 'வாசுகி' இதழின் ஆசிரியராக எட்டு வருடங்கள் பணிபுரிந்தார் தாமரைமணாளன். வாசுகி இதழில் இவர் எழுதிய 'உள்ளத்தைக் கிள்ளியவர்' என்னும் கடைசிப் பக்கக் கட்டுரைக்கு வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பு இருந்தது. எழுத்தாளர் சு. சமுத்திரத்தை ஊக்குவித்து, தான் ஆசிரியராக இருந்த இதழ்களில் எழுத வைத்தார். தினகரன் குழுமத்தின் நிறுவனரான கே.பி. கந்தசாமியின் வாழ்க்கை வரலாற்றை 'கரிசல் காட்டிலிருந்து ஒரு கர்மவீரர்' என்னும் தலைப்பில் தொடராக எழுதினார். கல்கியில் இவர் எழுதிய 'சில்லுக்கருப்பட்டி' என்ற தொடர், இவருக்கு மிகுந்த புகழைச் சேர்த்தது. இயக்குநர் கே. பாக்யராஜின் 'பாக்யா' இதழிலும் சில காலம் பணியாற்றியுள்ளார்.



தனது எழுத்து பற்றித் தாமரைமணாளன், "எந்த ஒரு தனிப்பட்ட இலட்சியத்தோடும் நான் கதைகள் எழுதுவதில்லை. என்னைப் பாதிக்கும் மனிதர்கள், என் சிந்தனையைத் தொடும் சம்பவங்கள் இவற்றினால் கிளர்ந்தெழுந்து, அவற்றை என் போக்கில் எழுதுவதுதான் என் பாணி. முற்போக்கு, பொழுதுபோக்கு என்ற லேபில்கள் எல்லாம் எனக்கு ஒட்டாதவை. எனக்கு எந்த இஸமும் கிடையாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

திரைப்படங்களுக்கும் தாமரைமணாளன் பங்களித்துள்ளார். 'இதய மலர்' திரைப்படத்திற்கு வசனம் எழுதியதுடன், ஜெமினிகணேசனுடன் இணைந்து அப்படத்தை இயக்கியுள்ளார். இவரது 'ஆயிரம் வாசல் இதயம்' தொடர் திரைப்படமாக வெளிவந்தது. 'அந்தப்புரம்', 'விலைக்கு வாங்கியிருக்கிறேன்' போன்ற இவரது நாவல்கள் தொலைக்காட்சித் தொடர்களாக வெளிவந்தன. சின்னத்திரை தொடர்கள் பலவற்றைத் தந்திருக்கும் தாமரைமணாளன், ஒன்பது திரைப்படங்களின் இயக்கத்தில் பங்களித்துள்ளார். தொலைக்காட்சித் துறையின் சிறந்த ஆல்ரவுண்டர் விருதை மயிலாப்பூர் அகாடமி இவருக்கு வழங்கிப் பாராட்டியது.



தாமரைமணாளனின் 'ஆயிரம் வாசல் இதயம்' நாவல், 1971-72 ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் முதல் பரிசு பெற்றது. 'பொதிகை பூங்குயில்' நாவல், ஆதித்தனார் இலக்கியப் பரிசு பெற்றது. 'அந்தப்புரம்' நாவல், 1981ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் இரண்டாம் பரிசு பெற்றது. நூற்றிற்கும் மேற்பட்ட நாவல்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகளும். முப்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களும், பல நூற்றுக்கணக்கான கட்டுரைகளும் எழுதியிருக்கிறார் தாமரைமணாளன்.

திடீர் உடல்நலக் குறைவால், மே 13, 2003 அன்று 68ம் வயதில், தாமரைமணாளன் காலமானார். எழுத்தாளர், இதழாளர், பத்திரிகை ஆசிரியர், சின்னத்திரை நாடக ஆசிரியர், திரைப்பட இயக்குநர் என கலை, இலக்கிய உலகின் அனைத்துத் தளங்களிலும் பங்களிப்புச் செய்தவர் தாமரைமணாளன்.

அரவிந்த்

© TamilOnline.com