திருவாலம்பொழில் ஆத்மநாதேஸ்வரர் ஆலயம்
திருவாலம்பொழில் ஆத்மநாதேஸ்வரர் ஆலயம் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தலப்பெருமை
மூலவர் பெயர் ஆத்மநாதேஸ்வரர், வடமூலேஸ்வர். அம்பாள் பெயர் ஞானம்பிகை. தலவிருட்சம் ஆலமரம் (தற்போது இல்லை), வில்வ மரம். தீர்த்தம் காவிரி. தலத்தின் புராணப்பெயர் ஆலம்பொழில். இத்தலக் கல்வெட்டு இறைவனை, "தென் பரம்பைக்குடி" என்றும், "திருவாலம்பொழில் உடைய நாதர்" என்றும் குறிக்கிறது. சைவசமயக் குரவர்களில் நாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் இது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 10வது தலம். பிரகாரத்தில் மூலவிநாயகர், பஞ்சலிங்கம், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், காசி விஸ்வநாதர், வள்ளி-தெய்வானையுடன் முருகன், நவக்கிரகங்கள், காசி விசாலாட்சி, நடராஜர் ஆகியோர் உள்ளனர்.

காசியபர், அஷ்டவசுக்கள் வழிபட்ட தலம். கோயிலில் சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், நால்வர் சன்னிதிகள் உள்ளன. இத்தலத்தில் உள்ள வெண் பொற்றாமரைக் குளத்தில் இந்திரன் நீராடி சாப விமோசனம் பெற்றான். நந்தியின் திருமணத்தை சுந்தரருக்கு ஞாபகப்படுத்திய தலம் இது. இத்தலத்து அம்மனை வழிபட்டால் ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம்.



திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு வேண்டியும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்திக்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்

இங்கு மூலவர் ஆத்மநாதேஸ்வரர் மேற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். 274 சிவாலயங்களில் இது 73 வது தேவாரத்தலம் ஆகும். சப்த ஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. இத்தலத்தில் தக்ஷிணாமூர்த்தி மேதா தக்ஷிணாமூர்த்தியாக உள்ளார்.

கோயிலில் ஆவணி மூலம், சஷ்டி, நவராத்திரி, கார்த்திகை சோமவாரங்கள், சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம் ஆகிய திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

ஆலயம் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்

பொல்லாத என்அழுக்கில் புகுவான் என்னைப்
புறம்புறமே சோதித்த புனிதன் தன்னை
எல்லாரும் தன்னையே இகழ அந்நாள்
இடுபலி என்று அகம்திரியும் எம்பிரானைச்
சொல்லாதார் அவர்தம்மைச் சொல்லா தானைத்
தொடர்ந்துதன் பொன்னடியே பேணுவாரைச்
செல்லாத நெறிசெலுத்த வல்லான் தன்னைத்
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

- திருநாவுக்கரசர்

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com