சார்லட்: பெண்களே நடத்திய தமிழ்ப் புத்தகக் கண்காட்சி
"என் புத்தகங்களில் இடம்பெற்றது போன்ற மாயா ஜாலங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் நல்ல புத்தகங்களைப் படிக்கும்போது உங்களுக்குள் மாயங்கள் நிகழும் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை" என்பார் ஜே.கே ரௌலிங்.

அமெரிக்காவில், ஒரு தொடர் புத்தகக் கண்காட்சியை முற்றிலும் பெண்களே நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது உலகப் பெண் கவிஞர் பேரவை, அட்லாண்டா மற்றும் வல்லினச் சிறகுகள் மின்னிதழ், அட்லாண்டா நிறுவனர் முனைவர் தி. அமிர்தகணேசன்.

சென்னைப் புத்தகக் கண்காட்சி அளவுக்குப் பெரிய கண்காட்சியாக இந்த அமெரிக்கக் கண்காட்சியும் உருவெடுக்கும் என்ற நம்பிக்கையோடு வல்லினச் சிறகுகள் ஆசிரியர் ராஜி ராமச்சந்திரன், அட்லாண்டா, அட்லாண்டா தமிழ் நூலக நிறுவனர் பொன்னி சின்னமுத்து, உலகப் பெண் கவிஞர் பேரவையைச் சேர்ந்த கவிஞர் மஞ்சுளா காந்தி, சென்னை, ஆகியோர் அடங்கிய திட்டக்குழு உறுப்பினர்களின் மேற்பார்வையில் புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்தக் கண்காட்சியின் அமைப்பாளர் சார்லட்டைச் சேர்ந்த இரம்யா ரவீந்திரன்.

தமிழகத்திலிருந்து புத்தகங்களை விவேகானந்தன் இராசேந்திரன் மற்றும் மஞ்சுளா காந்தி பெற்று அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள். சார்லட் தன்னார்வலர்கள் சாந்தி சுதாகர், அனுஷா பிரசன்னா, கிருத்திகா சுதாகர் மற்றும் இரமணி பாலசுப்பிரமணியன் புத்தகங்களைக் கணினியில் பட்டியலிட உதவினார்கள்.

புத்தகக் கண்காட்சி ஆகஸ்ட் 14, 2021 அன்று காலை 10 மணி அளவில், சார்லட்டில் உள்ள பிராங்க் லிஸ்க் பூங்காவில் ஹார்ட்செல் என்ற குடிலில் தொடங்கியது. தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சிக்காக அட்லாண்டாவைச் சார்ந்த கவிஞர் கிரேஸ் பிரதிபா விழாவின் நேரலையை ஒருங்கிணைத்தார்.

இந்த நிகழ்வின் நேரலையைக் கீழுள்ள தளத்தில் காணலாம்.



கண்காட்சியை மேகலை எழிலரசன், நிடியா காஸ்பர், சாமுண்டேஸ்வரி அர்ஜுன், சுதா விஜயகுமார், பிரேமா ஷ்யாம், சுதாகர் கிருஷ்ணமூர்த்தி, செல்வராஜ் ராமநாதன் ஆகிய பிரமுகர்கள் இணைந்து நாடா கத்தரித்துத் துவக்கி வைத்தார்கள். அவர்களுக்கு கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதை நூல்கள் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டன.

நோக்கவுரை நல்கிய முனைவர் அமிர்தகணேசன், இந்தப் புதிய முயற்சி ஒரு நெடிய கனவின் தொடக்கப் புள்ளி, தமிழக எழுத்தாளர்கள் அமெரிக்க மண்ணில் கொண்டாடப்படுவதைப் போல, அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் மண்ணில் கொண்டாடப்படக் கூடிய நாளும் வரும் என்று பேசினார். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர் திரு கால்டுவெல் வேள்நம்பி நேரலையில் வாழ்த்துச் செய்தி அளித்தார்.

அதன் பின் புதிய நூல்கள் வெளியீட்டு நிகழ்வு அரங்கேறியது. முதலாவதாக மருத்துவர் ஜெ. அம்பிகா தேவி நினைவு உலகளாவிய கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற நூல்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. அடுத்ததாக, அமெரிக்காவாழ் தமிழ்க் குழந்தைகள் படிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட 'கொஞ்சம் கதை கொஞ்சம் இலக்கணம்' என்ற எளிய இலக்கண நூல் வெளியிடப்பட்டது. கலைச்செல்வி கோபாலன் எழுதிய ‘தமிழ் எழுத்துக்கள் எழுதும் முறையும் ஒலிக்கும் முறையும்’ என்ற நூல், அட்லாண்டா, லில்பர்ன் பள்ளி மாணவர்கள் படம் வரைந்து, கதை எழுதிய எட்டு நூல்கள், மருத்துவர் நடராஜன் பெருமாள் (சென்னை) எழுதிய ‘என்னாச முத்தழகி’, பிரேமா ரவிச்சந்திரன் (சென்னை) எழுதிய ‘விடியலின் மொழி’ போன்ற நூல்கள் வெளியிடப்பட்டன.

அமெரிக்காவில் உள்ள தமிழ் எழுத்தாளர்களை ஒன்றிணைத்து வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (Association of Tamil writers of North America, ATWNA) என்ற அமைப்பு, புதுச்சேரி முனைவர் அமிர்தகணேசன் அவர்களால் நிறுவப்பட்டது. அதன் பெயர்ப்பலகை, சார்லட் தமிழ்ச் சங்கத் தலைவர் பாலா வேலாயுதம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.



சிறப்புரை நல்கிய மேகலை எழிலரசன், "அமெரிக்காவில் இப்படிப்பட்ட புத்தகக் கண்காட்சியை இதுவரை கண்டதில்லை" என்று பாராட்டினார். சிறப்பு விருந்தினர் நிடியா காஸ்பர், புத்தகக் கண்காட்சியை நனவாக்கிய அனைத்து சார்லட் தன்னார்வலர்களுக்கும் நன்றி தெரிவித்தார். புத்தக ஆர்வலர் செல்வராஜ் ராமநாதன் புத்தகக் கண்காட்சி அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் மட்டுமன்றி, உலகெங்கிலும் நடக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

இறுதியாக நன்றி உரை கூற வந்த வர்ணிகா ஆனந்த் மற்றும் ஸ்ரீவிதா அருண், சார்லட் தமிழ்ச் சங்கச் செயலவைக் குழு உறுப்பினர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் ஊடகப் பங்காளர் ரேடியோ தூள் மற்றும் தமிழ் அமெரிக்கா டிவி நிறுவனர் ஆஸ்டின் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்கள். பின்னிருந்து உழைத்த தன்னார்வலர்கள் சுதாகர் கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ் தயாளன், செந்தில் தியாகராஜன், வீராச்சாமி ஜோதிமணி, பிரசன்னா வீராச்சாமி, கலையரசி தாண்டவராயன், அரவிந்த் பிரான், அனீஸ் சுரேஷ், ரோகித் ஆனந்த், சிவஸ்ரீ அருண், அருண் திருநாவுக்கரசு, பாலசுப்ரமணியன் சுப்பையன், விமல் தியாகராஜ், ஆனந்த் திருநாராயணன் ஆகியோருக்கும் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்கள்.

தன்னார்வலர் ஹாசினி பாலசுப்பிரமணியன் குழந்தைகள் புகைப்படம் எடுக்க ஏதுவாகப் புத்தகங்களைப் பேசுபொருளாகக் கொண்ட கண் முகமூடிகளைத் தயாரித்துக் கொண்டு வந்திருந்தார். கதை, கவிதை, வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் நூல்கள், கட்டுரை, சிறுவர் நூல் என்று பல்வேறு வகை நூல்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

இரம்யா ரவீந்திரன்,
சார்லட், வட கரோலைனா

© TamilOnline.com