சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது
சாகித்ய அகாதமி, 24 மொழிகளில் பிற மொழிகளிலிருந்து மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படும் சிறந்த நூல்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்குகிறது. 2020ம் ஆண்டுக்கான விருது கே. செல்லப்பன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. வங்க மொழியிலிருந்து அவர் மொழிபெயர்த்த 'கோரா' நாவல் (மூலம்: ரவீந்திரநாத் தாகூர்) இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர், டாக்டர் கே. செல்லப்பன் சிவகங்கை மாவட்டம் பாகனேரியைச் சேர்ந்தவர். 1936ம் ஆண்டு பிறந்த இவர், ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் நுண்மாண் நுழைபுலம் மிக்கவர். மொழியியல் ஆராய்ச்சியாளரும் கூட. நூற்றுக்கணக்கான எம்.ஃபில், பிஹெச்.டி. பட்டதாரிகளை உருவாக்கியவர். இவரது மாணவர்கள் பலரும் புகழ்பெற்ற கல்லூரிகளில் முதல்வராக, பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றனர். 'சுவாமி விவேகானந்தர்', 'பொதிகைத் தென்றலும் மேலைக் காற்றும்', 'The World as a Stage: Shakespearean Transformations', 'Shakespeare and Ilango as tragedians: a comparative study', 'R.K. Narayan: the ironic mythmaker' உள்பட பல்வேறு நூல்களைத் தந்திருக்கிறார்.



T.E.S. ராகவன்
அதேபோல ஹிந்தியில் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருது திருக்குறளை ஹிந்தியில் மொழிபெயர்த்த T.E.S. ராகவன் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு வயது 92. தமிழ், சம்ஸ்கிருதம், ஹிந்தி மொழிகளில் புலமை வாய்ந்த ராகவன், “திருக்குறளைப் படிக்காவிட்டால் வாழ்க்கையே வீண்” என்கிறார். சென்னை பள்ளிகளில் ஹிந்தி மற்றும் தமிழ் ஆசிரியராக இவர் பணியாற்றியிருக்கிறார். திருக்குறளுக்குப் பல மொழிபெயர்ப்புகள் இருந்தபோதும், குறள்வெண்பா வடிவில் முதல் வரியில் நான்கு சொற்களும், இரண்டாம் வரியில் மூன்று சொற்களும் கொண்ட கவிதைகளாகவே மொழிபெயர்த்திருப்பது இந்நூலின் சிறப்பு.

மொழிபெயர்ப்பு விருதுகள் ரூ.50,000 ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் கொண்டவை.

© TamilOnline.com