ஜெ. ஃபிரான்சிஸ் கிருபா
'கன்னி' என்ற அற்புதமான நாவல் மூலம் இலக்கிய உலகின் கவனத்தை தன்மீது திருப்பிய ஃபிரான்சிஸ் கிருபா காலமானார். திருநெல்வேலியில் உள்ள பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்த இவர், கவிஞராக இலக்கிய உலகில் கால் பதித்தார். தனது காத்திரமான கவிச்சொற்கள் மூலம் வெகுஜன இதழ்களாலும் கவனிக்கப்பட்டார். பிரபல இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகிப் பலரையும் ஈர்த்தன. இவர் எழுதிய 'கன்னி' என்னும் புதினம், ஆனந்த விகடன் இதழால், 2007ம் ஆண்டின் சிறந்த புதினமாக விருது பெற்றது.

'மெசியாவின் காயங்கள்' என்பது இவரது முதல் கவிதைத் தொகுப்பு. தொடர்ந்து, 'நிழலன்றி ஏதுமற்றவன்', 'வலியோடு முறியும் மின்னல்', 'மல்லிகைக் கிழமைகள்', 'சம்மனசுக் காடு', 'ஏழுவால் நட்சத்திரம்', 'சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்' போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த கவிதைத் தொகுப்புகளாகும். தனது இலக்கியப் பணிகளுக்காக நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருது பெற்றவர். சுஜாதா விருது, கவிஞர் மீரா விருது உள்பட பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

திரைப்பட முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார். காமராஜர் படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதியவர் இவர்தான். கவிஞர் தேவதேவன் குறித்து ஓர் ஆவணப்படமும் எடுத்திருக்கிறார். 'வெண்ணிலா கபடிக்குழு', 'அழகர்சாமியின் குதிரை', 'ராட்டினம்', 'குரங்கு பொம்மை' போன்ற திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார். குறும்படம், திரைப்படம், பெரும்புதினம் எனப் பல்வேறு கனவுகளை தனக்குள் வைத்திருந்த ஃபிரான்சிஸ் கிருபா அவை முழுமையாகாமல் உடல்நலக்குறைவால் காலமானார்.

© TamilOnline.com