பலத்தைக் கணிக்கும் இடைத்தேர்தல்!
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக் காலமே இருக்கும் நிலையில் காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளுக்கான இடைத் தேர்தலைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசு 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார். கும்மிடிப்பூண்டி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் சுதர்சனம் அண்மையில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆனால் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு வருடம் இருக்கும் நிலையில் இந்த இடைத்தேர்தலை ஆளும் அ.தி.மு.க. அரசு விரும்பவில்லை. காஞ்சிபுரத்தில் சுனாமி நிவாரணப் பணிகள் நடைபெறுவதைக் காரணம் காட்டித் தேர்தலைத் தள்ளி வைக்கத் தமிழக அரசு கோரியது. ஆனால் தேர்தல் ஆணையம் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கொள்ளாமல் இவ்விரு தொகுதிகளுக்கும் மே 14-ம் தேதி தேர்தலுக்கான தேதியை அறிவித்தது. இதையடுத்து இவ்விரு தொகுதிகளிலும் இப்பொழுதே களை கட்டிவிட்டது.

இடைத்தேர்தலில் போட்டியிடத் தயங்கவில்லை என்று காட்டும் விதமாக தேர்தலுக்கான அறிவிப்பு வந்த அன்று மாலையே வேட்பாளர் விண்ணப்பங்களுக்கான அழைப்பை அ.தி.மு.க. வெளியிட்டது. காஞ்சியில் மறைந்த திருநாவுக்கரசின் மனைவி மைதிலியும், கும்மிடிப்பூண்டியில் மறைந்த சுதர்சனத்தின் மகன் விஜயகுமாரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

எதிரணியில் பலமான கூட்டணியின் துணையுடன் தி.மு.க. களம் காணத் தயாராகவிருக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் படுதோல்வியடைந்த அ.தி.மு.க. தற்போது தனியாக இடைத்தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது.

இடைத்தேர்தல் வெற்றி, வருகிற ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று நினைக்கும் அ.தி.மு.க அதற்கான வியூகங்களைத் தற்போதே வகுத்துள்ளது. கட்சியில் முக்கிய அமைச்சர்கள் தேர்தல் பணிகளை முடுக்கி விட நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com