காதில் விழுந்தது.....
"சுனாமிக்குப் பின்னர் உலகச் சமுதாயம் நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறது என்று கருதுகிறோம். சுனாமி தாக்கிய 20 நிமிடங்களுக்குள் விடுதலைப் புலிகள் பேரழிவுக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வகுத்து மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணச் சேவைகளை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்தது. இதன்மூலம், மக்களின் தேவைகளை நிறைவேற்றும் ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது என்று உலகுக்குக் காட்டியதோடு நாங்கள் மக்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்கிறோம் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறோம்; ஏனென்றால், விடுதலைப் புலிகள் ஒரு மக்கள் இயக்கம், மக்களின் நலம் தான் எங்கள் தலையாய நோக்கம்."

எஸ்.பி. தமிழ்ச்செல்வன், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் குழுத் தலைவர்.

*****


எங்கே அரசுகள் துணிச்சலுடன் வழிகாட்டுகிறார்களோ, அங்கே மக்கள் அதைக் காட்டிலும் அதிகத் துணிச்சலுடன் பீடுநடை போடுகிறார்கள் என்பதற்கு இது இன்னுமொரு எடுத்துக்காட்டு.

டெய்லி ஸ்டார், பெய்ரூத், லெபனான், முதல் இந்தியா-பாகிஸ்தான் காஷ்மீர் பேருந்துப் பயணம் பற்றி.

*****


21-ம் நூற்றாண்டில் இந்தியா உலகில் ஒரு முக்கியமான சக்தி வாய்ந்த நாடாக வளரத் துணை புரிவது நமது நோக்கம் என அதிபர் புஷ்ஷின் அரசு அறிவித்துள்ளது. தீவிரவாத இஸ்லாம், ஓங்கி வரும் சீனா என்று இந்த நூற்றாண்டில் உலகை வம்புக்கழைக்கும் தலையாய சக்திகளைச் சந்திக்கும் முன்னணி அமைப்பதில் இது முக்கியமான அடியெடுப்பு. நமது முன்னாள் பங்காளிகளான ஐரோப்பியர்களைப் போலல்லாமல், இந்தியாவுக்கும் இதே சக்திகளைப் பற்றிய கவலை இருக்கிறது. மேலும், மக்களாட்சி பற்றிய உறுதி, போர்ப்படை வல்லமையின் தேவை பற்றிய புரிதல் இவற்றில் இந்தியா நம்முடன் இசைந்திருக்கிறது. இந்தியாவை விட நல்ல பங்காளியை அமெரிக்கா கனவிலும் காண முடியாது.

டாம் டான்னலி, வாஷிங்டனின் த வீக்லி ஸ்டாண்டர்ட் இதழில்

*****


1890-களின் தொடக்கத்தில், பெரும் பணக்காரர்களான ஜான் டி. ராக்·பெல்லர், ஆண்ட்ரூ கார்னேகி ஆகியோரின் ஆண்டு வருமானம், பெரும்பாலான அமெரிக்க மாநிலங்களின் வரி வருவாயைவிட அதிகமாக இருந்தது. தனி மனிதர்களிடம் எல்லையற்ற செல்வம் இருப்பதன் விளைவு களைக் கருதி அமெரிக்க காங்கிரஸ் 1893-ல் தேசிய வருமான வரியை இயற்றியது. பெரும்பாலான அமெரிக்கர்களின் ஆண்டு வருவாய் $1000க்கும் குறைவாக இருந்த 1894-ல் ராக்·பெல்லர் $1,247,252.65 தன் வருமானமாக வரிப்படிவத்தில் குறிப்பிட்டார். உலகிலேயே பணக்கார மனிதர் ராக் ·பெல்லர் அன்று கட்டிய வரி $14,961.39.

பீட்டர் டாப்கின் ஹால், ஹார்வர்ட் பல்கலையின் கென்னடி அரசாங்கவியல் பள்ளி.

*****


மனித குலம் உலகின் இயற்கை வளங் களில் மூன்றில் இரண்டு பங்கைச் செல வழித்து விட்டது என்று எச்சரித்தனர் உலக விஞ்ஞானிகள். உலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் தேவையான காற்று, நீர், உயிர்ச்சத்துகளை சுழற்சி செய்யும் இயற்கை வளங்களை அடியோடு அழித்துக் கொண்டிருக்கிறது மனிதகுலம். இந்த அழிவால், இனிவரும் சந்ததிகள் உலகில் வாழ முடியும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள். நிலத்தடி நீரை இயற்கை நிரப்புவதைவிட வேகமாக நாம் உறிஞ்சிக் கொள்வது நமது அடுத்த தலைமுறையிடமிருந்து நாம் பறித்துக் கொள்வதற்குச் சமம் என்கிறார்கள்.

கார்டியன் நாளேடு, லண்டன்

*****


டி.வி. பார்ப்பது மூளையை வளர்க்கும்!

பழைய காலத்து நல்லதைப் போதிக்கும் கதைகள், திரைப்படங்கள், தொலைக் காட்சிகளை விட, இந்தக்காலத்து நிகழ்ச்சி கள் நிஜ உலகை அப்பட்டமாகக் காட்டு கின்றன; ஒரே நிகழ்ச்சியைப் பல முறை பார்த்து வெவ்வேறு கோணங்களில் அணுக வேண்டியிருக்கிறது. பல்வேறு கதைகள் பின்னிப் பிணைந்திருப்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. சிக்கலான மனித உறவுகளின் மாற்றங்கள், ஊகிக்க வேண்டிய பின்னணிக் கதைகள், பாத்திரங் களின் நெடுங்கால வளர்சிதை மாற்றங்கள் எல்லாவற்றையுமே உன்னித்துக் கவனிக்க வேண்டியிருக்கிறது. கணினிக் கேளிக்கை களின் தன்மைகளைக் கொண்டு பார்வை யாளர்களின் சிந்தனையைத் தூண்டி விடும் இது போன்ற நிகழ்ச்சிகள் கட்டாயம் நம் மூளையை வளர்க்கும்.

ஸ்டீவன் ஜான்சன், நியூ யார்க் டைம்ஸ்

*****


ஈ-மெயில் படிப்பது மூளையை மழுங்கச் செய்யும்!!

அடிக்கடி மின்னஞ்சலிலோ, மின்னரட்டையிலோ எழுதிக்கொண்டும், தொலைபேசியில் பேசிக்கொண்டும் இருப்பவர்களிடம் கஞ்சா குடிப்பவர்களைவிட அதிகமான கவனக் குறைவும், அறிவு மழுங்கலும் காணப் படுகிறது என்கின்றனர் இங்கிலாந்து விஞ்ஞானிகள். இது தற்காலிகத் தாக்கமாக இருந்தாலும், தொடர்ந்து இதுபோல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் கவனமும், அறிவும் குறைந்து விடுமா என்று கேட்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள் இவர்கள். இதைச் சமாளிக்க ஒரே வழி, தொழில்நுட்பம் நம்மை அடக்கி ஆள்வதை நிறுத்தி நாம் தொழில் நுட்பத்தை அடக்கி ஆளவேண்டும்.

கார்டியன் நாளேடு, லண்டன்.

*****


அம்வே இந்தியாவில் கற்றுக் கொண்ட பாடங்கள்

இந்தியர்கள் கடைக்கு வந்து, சாமான்களை எடுத்து, தொட்டுப் பார்த்த பின்னே எதையும் வாங்குகிறார்கள். வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுப்பதில் அவர்களுக்கு அவ்வளவு அக்கறையில்லை. அதேபோல "ஒரே அளவு எல்லோருக்கும் பொருந்தும்" என்ற கணக்கு இந்தியாவைப் பொருத்தவரையில் தப்புக் கணக்கு. இந்தியர்கள் எந்தப் பொருளையும் வாங்கும் முன்னர் அதைப் புழங்கிப் பார்க்க விரும்புகிறார்கள். அதனால் பல கடைகளைத் திறக்க வேண்டியிருக்கிறது. அதேபோல் பழக்கமில்லாத பொருள்களை மலிவான விலை யில் பெரிய பெட்டிகளில் வாங்குவதையும் இந்தியர்கள் விரும்புவதில்லை. அதனால் குட்டி, சிறியது, இடையது, பெரியது, என்று வெவ்வேறு அளவுகளில் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டியிருக்கிறது.

வில்லியம் பின்க்னி, அம்வே இந்தியாவின் நிர்வாக இயக்குநர், ரிடி·ப்.காம் வலையிதழில்

நெடுஞ்செவியன்

© TamilOnline.com