ஜவ்வரிசி வடகம்
தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி - 3 கிண்ணம்
பச்சை மிளகாய் - 15 (சுமாரான காரமுள்ளது)
உப்பு - தேவைக்கேற்ப
எலுமிச்சம் பழம் - 1
பிளாஸ்டிக் காகிதம் - 1 (பெரியது)

செய்முறை

ஜவ்வரிசியை 4 முதல் 6 மணி நேரம் ஊற வைக்கவும். பச்சை மிளகாய், உப்பு இவற்றைத் தண்ணீர் விட்டு மிக்சியில் அரைக்கவும்.

ஊறிய ஜவ்வரிசிக்கு மேல் 4 முதல் 6 அங்குலம் உயரம் தண்ணீர்விட்டு அடி கனமான பாத்திரத்தில் வைத்து, நிதானமாக அடுப்பை எரியவிட்டு வேகவைக்கவும்.

அடிபிடித்துக் கொள்ளாமல் கிளறிக் கொண்டே வரவும். கொஞ்சம் கிளற மறந்தால்கூட அடி பிடித்துவிடக் கூடும்.

ஆகையால் நிதானமாக மேலும் கீழும் கிளறிவிடவும். சுமார் 10, 15 நிமிடத்திற்குள் வெந்துவிடும்.

நன்றாக வெந்தவுடன் அடுப்பிலிருந்து கீழே இறக்கி, தட்டு ஒன்றால் மூடவும்.

சுமார் 1 மணி நேரம் கழித்து எலுமிச்சம் பழச்சாறு, மற்றும் ஏற்கெனவே தயாராக அரைத்து வைத்திருக்கும் விழுது ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

வெயில் வரும் இடத்தில் பிளாஸ்டிக் காகிதத்தை விரித்து, அதில் சிறிய கரண்டியால் வட்டவட்டமாக மாவை வைக்கவும்.

இரண்டு நாட்கள் வெயிலில் உலர்த்தவும். இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒவ்வொன்றையும் திருப்பி போட்டுக் காய விடவும்.

நன்கு காய்ந்தவுடன் நன்கு உலர்ந்த டப்பாக்களில் போட்டு இறுக மூடிவைக்கவும்.

தேவையானபோது பொரித்துச் சாப்பிடலாம்.

குறிப்பு: ஜவ்வரிசியை ஊறியபின் அது நன்றாக மலர்ந்து, தண்ணீருக்கு மேலாகக் கிளம்பி வரும்வரை வைத்திருப்பது நல்லது. தண்ணீர் அதிகம் விட்டுக் கிளறலாம். வடகமும் நிறையக் கிடைக்கும். ஜவ்வரிசி ஊறியபின்னும் போட்டபடியே இருந்தால் தண்ணீர் அதிகம் தாங்காது. கிளறும்போது கெட்டியாகக் கிளற வேண்டும். இல்லாவிட்டால் நீர்த்துப்போய். வடகம் தாளோடு ஒட்டிக்கொண்டுவிடும்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com