சாதனைச் செல்வி ஏஞ்சலின் ஷெரில்
ஏஞ்சலின் ஷெரிலுக்கு வயது 20. ஆனால், இந்த இளவயதுக்குள் பதினைந்து உலக சாதனைகள் இவர் கைவசம். நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகள், ஆயிரக்கணக்கான மேடைகள் என்று சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஏஞ்சலின், எல்லோரையும் போல் ஆரோக்கியமான உடலைமைப்பைப் பெற்றவர் அல்ல.

'Congenital adrenal hyperplasia' எனப்படும் குறைபாடு கொண்டவர். அதாவது பிறவியிலேயே, 'அட்ரினல்' சுரப்பி இல்லாமல் பிறந்தவர். இது ஒரு குணப்படுத்த முடியாத பிறவிக் கோளாறு. அதனால் இவரும் இவரது குடும்பமும் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம். எப்போது உடலநலப் பிரச்சனை வரும் என்று சொல்ல முடியாது. திடீர் திடீரென நோய்வாய்ப் படுவார். அதனால், மருத்துவமனையே கதி என்று இருந்தது குடும்பம். குழந்தை ஏஞ்சலினை வைத்துக்கொண்டு அவர் அம்மா ஜாக்குலின் பட்ட சிரமங்கள் ஏராளம். ஏற்கெனவே இதே குறைபாட்டுடன் பிறந்த குழந்தை, சிறு வயதிலேயே இறந்துவிட்டதால், எப்படியும் இந்தக் குழந்தையைப் பிழைக்கச் செய்துவிட வேண்டும் என்று ஜாக்குலின் உறுதியாக இருந்தார். மருந்து, மாத்திரை இல்லாமல் ஒருநாள்கூட இருக்க முடியாத நிலைமை.



இந்நிலையில் தான் யோகப்பயிற்சி பற்றி அறிந்தார் ஜாக்குலின். மகளுக்கு அது நிச்சயம் கைகொடுக்கும் என்று நம்பினார். யோகம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார் ஏஞ்சலின். நான்காவது படிக்கும்போது கரகம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். எட்டாவது வகுப்பில் சிலம்பம். கடலூரில் இயங்கும் 'சிறகுகள்' என்ற தன்னார்வ அமைப்பின் மூலமாக இவரது திறமைகள் வெளித்தெரிய ஆரம்பித்ததன. பரதம், கரகம், சிலம்பம் மட்டுமில்லாமல், குச்சிபுடி, பொய்க்கால் குதிரை, தேவராட்டம், மோகினியாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், மான்கொம்பு, கதக், ஒடிசி, வெஸ்டர்ன் ஃப்ரீ ஸ்டைல், ஹூலா ஹூப் என ஐம்பதுக்கும் மேற்பட்ட கலைகள் தெரியும் ஏஞ்சலினுக்கு.

ராகவா லாரன்ஸுடன்



இந்தியாவிற்காக விளையாடி சிலம்பத்தில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ள ஒரே பெண் ஏஞ்சலின் ஷெரில்தான். கரகத்தைத் தலையில் சுமந்தவாறே ஆடி, கீழே வைக்கப்பட்ட ஊசியைக் கண்களால் எடுப்பது, பிளேடைக் கண் இமையால் எடுப்பது, ஆணிப்பலகை மீது ஏறி நின்று கரகம் ஆடுவது, கண்ணாடித் துண்டுகள் மீது ஆடுவது, கண்ணாடித் துண்டுகள் மீது யோகம் செய்வது, இரண்டு கைகளாலும் சிலம்பம் சுழற்றுவது என்று பல சாதனைகளைச் செய்திருக்கிறார் ஏஞ்சலின். குவைத், மலேசியா போன்ற நாடுகளிலும் நடன நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.


'நடன மயில்', 'நாட்டியப் பேரொளி', 'கலை இளம் மயில்', 'நடனப் பதுமை', 'நடனச் சுடர்', 'கிராமத்து மயில்', 'வளர் இளம் மயில்', 'ஆற்றல் மங்கை', 'சக்தி சாதனா' எனப் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். 'இளந்தளிர்' மற்றும் 'கலை இளமணி' எனத் தமிழக அரசின் இரு சிறப்பு விருதுகளைப் பெற்றிருக்கிறார். திரைப்பட வாய்ப்புகள் சிலவும் இவருக்கு வந்துகொண்டிருக்கின்றன. நாட்டியச் சிறகுகள் கலைக்கூடம் மற்றும் அறக்கட்டளை என்பதை நிறுவி அதன்மூலம், அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும் இலவசமாக நடனம் கற்றுக்கொடுக்கிறார். தஞ்சை தனியார் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்து வருகிறார். கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கில உரையாடல் வகுப்புகளை இலவசமாக எடுத்து வருகிறார்.



3 மி.கி. ஸ்டீராய்டோடு தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர், இப்போது 20 மி.கி. ஸ்டீராய்டு எடுத்துக்கொள்கிறார். மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் ஒருநாள் கூட இவரால் இருக்க முடியாது. அதற்குப் பக்க விளைவுகளும் உண்டு. இன்றளவும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை, மருத்துவமனையில் உள்நோயாளியாகத் தங்கி சிகிச்சை எடுத்து வருகிறார். நடனத்தில் Ph.D. செய்ய ஆசை. மற்றோர் ஆசை, தொடர்ந்து ஏழு மணி நேரம் நடனமாடி கின்னஸ் சாதனை செய்ய வேண்டும் என்பது. "எனது வெற்றிகளுக்கெல்லாம் காரணம் எனது அம்மாதான்" என்கிறார் ஏஞ்சலின்.

ஏஞ்சலின் ஷெரிலின் சில சாதனை நடனங்களை இங்கே பார்க்கலாம்

ஏஞ்சலினின் அன்னை ஜாக்குலின்



பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி


ஸ்ரீவித்யா ரமணன்

© TamilOnline.com