காஸ்யபன்
தமிழின் மூத்த எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தைத் தொடங்கிய முன்னோடிகளுள் ஒருவருமான காஸ்யபன் (86) காலமானார். இயற்பெயர் சியாமளம். எழுத்தாளர் தி.சா. ராஜூ, விமர்சகர் தி.க. சிவசங்கரன், பத்திரிகையாளர் முத்தையா போன்றோரால் இவர் இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டார். முதல் படைப்பு 1962ல் 'தாமரை' இதழில் வெளியானது. தொடர்ந்து செம்மலர் போன்ற இதழ்களில் எழுதினார். பொதுவுடைமைக் கருத்துக்களில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த இவர், அவற்றைத் தனது படைப்புகளில் முன்வைத்தார்.

சிறுகதை, நாவல், நாடகம் என்று நிறைய எழுதியிருக்கிறார். இவரது 'வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால்' என்ற நாடகம், அக்காலத்தில் பெரிதும் பாராட்டப்பட்ட ஒன்றாகும். தேசிய நாடகப் பயிற்சிப்பள்ளியில் பயின்ற இவர், நடிப்பு, கதை-வசனம், இயக்கம் என்று நாடகம் சார்ந்து தீவிரமாக இயங்கியவர். தெலுங்கானா விவசாயிகள் பிரச்சனையை மையமாக வைத்து இவர் எழுதிய 'கிருஷ்ணா நதிக்கரையினிலே' நாவல் குறிப்பிடத்தகுந்த ஒன்று. முற்போக்கு இதழான 'செம்மலர்' இதழின் ஆசிரியர் குழுவிலும், 'தீக்கதிர்' இதழின் உதவி ஆசிரியராகவும் பணி புரிந்திருக்கிறார்.

மதுரையில் ஆயுள் காப்பீட்டுத்துறையில் பணியாற்றிய இவர், பணி ஓய்வுக்குப் பின் மகன் சத்தியமூர்த்தியுடன் நாகபுரியில் வசித்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா தொற்றால் மகனை இழந்தார். மூப்பின் காரணமாகத் தைப்பொங்கல் நாளன்று இவர் காலமானார். இவரது மனைவி முத்துமீனாட்சியும் ஓர் எழுத்தாளரே. மகள் ஹன்ஸா வழக்குரைஞர்.

© TamilOnline.com