நனவாகும் சேதுசமுத்திரதிட்டம்
140 ஆண்டுகளாக விவாதிக்கப்பட்ட, தமிழகத்தின் நெடுநாள் கனவான 'சேது சமுத்திர திட்டம்' நனவாகும் காலம் கனிந்து வந்துவிட்டது.

முதன் முதலாக நாடாளுமன்றத்தில் இதற்காக தமிழகத்திலிருந்து குரல் கொடுத்தவர் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தான். மன்னார் வளைகுடாவில் இருந்து பாக். ஜலச்சந்தி வழியாக வங்கக் கடலுக்குக் கப்பல்கள் செல்ல வழிவகுக்கிறது இத்திட்டம்.

மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு கூட்டம் தில்லியில் பிரதமரின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரூபாய் 2,427 கோடி ரூபாய் முதலீட்டில் சேதுசமுத்திரக் கால்வாய் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. சுமார் 180 வாரங்களில் திட்டத்தை நிறைவேற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் இருந்து கிழக்குக் கடற்கரையில் உள்ள துறைமுகங்களுக்குச் செல்வதற்குக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியிருக்கின்றது. இதற்குக் காலம் மற்றும் பொருட்செலவு அதிகமாகிறது. இதற்கு மாற்றாக, ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியை அடுத்த ஆதாமின் பாலம் (இராமாயணத்தில் இலங்கைக்கு அமைக்கப்பட்டதாக NASAவின் படத்தில் தென்பட்ட பகுதி) கால்வாயைத் தோண்டி கடலை ஆழப்படுத்துவதன் மூலம், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு நேரடியாகக் கப்பல்களை இயக்க முடியும் என்பதாகும்.

இத்திட்டம் நிறைவேறினால் கப்பல்களின் பயண தூரம் 400 கடல் மைல்களும், பயண நேரம் சுமார் 36 மணிநேரமும் குறையும்.

இதற்கான செலவு, கால்வாய் வழி, கால்வாய் அமைப்பதால் கடல்வாழ் உயிரினங்கள், பவளப் பாறைகளுக்கு ஏற்படும் பாதிப்பு, மீனவர்கள் இடம் பெயர்வதால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு, எல்லைப் பாதுகாப்பு என்று அனைத்து அம்சங்களும் விரிவாக ஆயப்பட்டன.

இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியக் கப்பல் கழகமும், தூத்துக்குடித் துறைமுகப் பொறுப்புக் கழகமும் இணைந்து தலா 50 கோடி ரூபாய் வழங்குகின்றன. அதுமட்டுமல்லாமல் சென்னை, எண்ணூர், விசாகப்பட்டினம், பாரதீப் துறைமுகப் பொறுப்புக் கழகங்கள் மற்றும் டி.சி.ஐ. ஆகியவை தலா 30 கோடி ரூபாய் வழங்குகின்றன. இவற்றின் மூலம் 350 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும். மீதமுள்ள தொகையை அரசே ஒதுக்குகிறது.

இத்திட்டத்தை அமல்படுத்தச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு 'சேது சமுத்திரம் கார்ப்பரேஷன் லிமிடெட்' என்கிற புதிய நிறுவனம் தொடங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் 800 கோடி ரூபாய். துறைமுகங்கள் மூலம் 350 கோடி ரூபாய் நிதி கிடைக்கப்பெறுகிறது. மீதமுள்ள 450 கோடி ரூபாயை மத்திய, மாநில அரசுகள் வழங்கவிருக்கின்றன.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com