கடுகு (எ) பி.எஸ்.ரங்கநாதன்
கடுகு என்ற புனைபெயரில் எழுதி அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவர்ந்த பி.எஸ். ரங்கநாதன் (88) காலமானார். செங்கல்பட்டு செயின்ட் ஜோசஃப் பள்ளியில் மாணவராக இருந்த காலத்திலேயே எழுத்தார்வம் வந்துவிட்டது. நண்பர் சித்ராலயா கோபுவுடன் இணைந்து நகைச்சுவை நாடகங்களை எழுதி அரங்கேற்றினார். அவை பாராட்டை அள்ளின. எழுத்தார்வம் சுடர் விட்டது. கல்கி இவரை ஊக்குவித்தார். எஸ்.ஏ.பி. ஆதரித்தார். சாவி இவரது எழுத்துக்களை ரசித்துப் போற்றினார். தொடர்ந்து எழுதுமாறு தூண்டினார். நகைச்சுவைக் கதைகளோடு சுவாரஸ்யமான சிறு சிறு கட்டுரைகளையும் எழுதினார். கடுகு, அகஸ்தியன் போன்ற புனைபெயர்களில் எழுதிக் குவித்தார்.

விளம்பரத் துறை மற்றும் கணிப்பொறித் துறையிலும் இவர் வல்லவராக இருந்தார். கணினி அறிமுகமான ஆரம்ப காலத்தில் இணையதளங்களுக்காகவும், இதழ்களுக்காகவும் பல எழுத்துருக்களை உருவாக்கி அளித்திருக்கிறார். 'ஆனந்தி' என்ற தமிழ் மென்பொருளையும் உருவாக்கியிருக்கிறார். கடுகு அவர்களுக்குக் கல்கியிடம் பக்தி அதிகம். தான் கட்டிய வீட்டுக்குக் 'கல்கி' என்றுதான் பெயர் வைத்தார், மகளுக்கு 'ஆனந்தி' என்று பெயர் சூட்டினார்.

உலக இலக்கிய, அரசியல், சமூக, நாடக நூல்களை இவரளவுக்கு வாசித்த தமிழ் எழுத்தாளர்கள் வெகு குறைவு. ஒவ்வொருமுறை வெளிநாடு செல்லும்போதும் அங்கே நூலகங்களுக்குத்தான் முதலில் போவார். அந்நாட்டின் பிரபல எழுத்தளார்களைப் பற்றி அறிந்துகொண்டு அவர்களது நூல்களையும், சிறப்புத் தொகுப்புகளையும் உடனடியாக வாங்கிவிடுவார். அவற்றை வாசித்து, பக்கம் பக்கமாக விரிவான குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறார். தனது சென்னை இல்லத்தின் மேல்தளத்தை ஒரு நூலகமாக்கி வைத்திருந்தார்.

ஓவிய எழுத்தில் (Calligraphy) மிகுந்த ஆர்வம். 'Stereogram' எனப்படும் முப்பரிமாணத் தோற்றப் படங்களை உருவாக்குவதில் தேர்ந்தவர். ஆயினும் மிக அமைதியாக, தன்னடக்கத்துடன் ஒரு கர்மயோகியாக வாழ்ந்தார். அனைவரிடமும் நட்புடன் பழகியவர். இவரது சாதனைகளில் குறிப்பிடத்தகுந்தது, மனைவியின் உதவியுடன், கணினியில் தட்டச்சுச் செய்து 'நாலாயிர திவ்யப் பிரபந்தம்' நூலை அழகாகப் பதம் பிரித்து, பெரிய எழுத்துருவில் வெளியிட்டதுதான். அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக மிகக் குறைந்த விலையில் தந்தார். பலருக்கு விலையின்றியும் அளித்திருக்கிறார். கடவுளுக்குச் செய்யும் சேவையாகவே அதனைக் கருதினார்.

உடல்நலமில்லால் இருந்ததைக்கூட நகைச்சுவையாகத் தனது வலைத்தளத்தில் "நான் விலகி மட்டும் இல்லை; படுத்தபடியும் இருக்கிறேன். இடுப்புச் சதையில் பயங்கர வலி. வீட்டிலேயே ஃபிஸியொதெரபி செய்கிறேன், கடும் முயற்சியுடன்.... போதும்.... என் அழுகைப் பிரசங்கம். நான் சொல்ல வந்தது என்னவென்றால், அடுத்த பதிவு தாமதமாகும்" என்று அறிவித்தவர், அடுத்த பதிவைத் தராமலே மறைந்துபோனார். அவர் மறைந்தாலும் அவரது எழுத்துக்கள் என்றும் இணையவெளியிலும், வாசகர் உள்ளங்களிலும் இருக்கும். (கடுகு பற்றி மேலும் விரிவாக வாசிக்க: ஜூன் 2014 இதழ்)

எழுத்துலக மேதைக்குத் தென்றலின் அஞ்சலி.

© TamilOnline.com