ஆல்ஃபரெட்டா: பொங்கல் விழா
ஜனவரி 12, 2020 ஞாயிற்றுக்கிழமை நாளன்று ஆல்ஃபரெட்டா தமிழ்ப் பள்ளி பொங்கல் திருநாளை வெகு சிறப்பாகக் கொண்டாடியது. அழகான கோலம், பொங்கல் பானையும், கரும்பும், வாழ்த்தும் என யாவும் தைத் திங்களில் மானுடத்தைக் காக்கும் கதிரவனுக்கு நன்றி தெரிவித்தன.

வாண வேடிக்கை வெடித்துச் சிதறியது போல் அரங்கத்தின் இருபுறமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களும், அவர்களினூடே வண்ணத்துப் பூச்சிகளாய் 280க்கும் மேற்பட்ட குழந்தைகளும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். தமிழ் நாட்டு மக்களே பார்த்து வியக்கும் அளவிற்கு, பொங்கல் விழா இங்கு நடந்ததென்று கூறினால் வியப்பல்ல.

தமிழ்த்தாய் வாழ்த்து, அமெரிக்க தேசிய கீதம், அதைத் தொடர்ந்து பங்கேற்பாளர் அணிவகுப்பு, பள்ளி முதல்வரின் வரவேற்பு எனக் கோலாகலமாகத் தொடங்கியது விழா. நடனக் குழுக்கள் வானவில்லை எடுத்து உடுத்திக் கொண்டாற்போல வண்ணத்துப் பூச்சியாக, மானாக, மயிலாக, பூவாக, புலியாக ஆடிக்கொண்டு அணிவகுத்து வந்தது பார்த்தோருக்குப் பரவசத்தை உண்டாக்கியது. எட்டு குழுக்களாகக் குழந்தைகள் நடனம் மற்றும் ஒரு பெரியவர்கள் குழு நடனம் இடம்பெற்றன.

'இயற்கையைப் போற்றுவோம்' என்ற மையக்கருத்தில் அமைந்த பொங்கல் கொண்டாட்டத்தில், தலைப்பிற்கு ஏற்ப மழை, மண், மரம் என்று இயற்கையை பாதுகாத்து, விவசாயத்தைப் போற்றும் விதமான காட்சிகளைத் தமது பாடல், நடனம், ஆடை அணிமணிகள் வழியே பறைசாற்றினார்கள். "பச்சைக்கிளி பாடும் பாட்டு" என்று பாடிக்கொண்டே அழகான குழந்தைகள் அரங்கத்தில் அங்குமிங்கும் ஆடி ஓடி, பார்வையாளர்களை கிராமச் சூழலுக்கே கூட்டிச் சென்றார்கள். "கொக்கு பற பற" என்று அரங்கத்திலே பட்டம் விட்டும், இயற்கை அன்னையைப் போற்றியும், "பூவ பூவ பூவே" என்று குட்டிக் குட்டி அரும்புகளும், மொட்டுகளும் அரங்கத்தை மரமாகவும் மலராகவும் அலங்கரித்து, அனைவரையும் களிப்பில் ஆழ்த்தினர்.

நிகழ்ச்சியின் முடிவில் விருந்தினர் உட்பட அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கலும் கரும்பும் வழங்கப்பட்டன.

ஆல்ஃபரெட்டா தமிழ்ப் பள்ளி கடந்த 18 வருடங்களாக ஜார்ஜியா மாநிலத்தில் மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. இதுவொரு லாப நோக்கற்ற (501C) தொண்டு நிறுவனம்.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் வாயிலாகப் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் குழந்தைகள் வாயிலாக, நம் பாரம்பரியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் விதைத்துக் கொண்டிருக்கும் ஆல்ஃபரெட்டா தமிழ்ப் பள்ளி நிர்வாகத்தினரையும், ஆசிரியர்களையும் பாராட்டியே தீரவேண்டும்.

ரம்யா ராஜ்குமார்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com