தென்றல் பேசுகிறது...
மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பார்கள். உயர் பீடத்தில் இருப்பவர் தன் குடும்பம், தனக்கு எப்படியாகிலும் சொத்துச் சேர்ப்பது, தன் பதவியைத் தக்கவைத்துக் கொள்வது என்றிருந் தால், அரசு அதிகாரிகளுக்கும், ஏன், சாமானியனுக்கும்கூட நீதி நியமங்களை மீறிய வழிகளில் எதிராளிக்குக் குழி தோண்டுவதும், லஞ்சமும் ஏற்கப்பட்ட வழிமுறைகள் ஆகிவிடும். நாடு விடுதலை பெற்ற 67 ஆண்டுகளில் அப்படி ஒரு நிலைமையை இந்தியா அடைந்தது. தற்போதுதான் விடிவுக்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கியுள்ளன.

ஆனால் அமெரிக்காவிலோ, அதிபருக்கெதிரான பதவிநீக்க விசாரணை தொடங்கிய பின் வெளிவரும் விஷயங்கள், கழிவுநீர்க் குட்டையைக் கலக்கிய கதையாக இருக்கிறது. ட்ரம்ப்பின் அதிகார துஷ்பிரயோகம் என்பதை மீறி அரசு எந்திரத்தில் பலரும் அவருக்காகக் கச்சை கட்டிக்கொண்டு தவறுகளைச் செய்திருப்பது அம்பலமாகி வருகிறது. இன்னும் என்னென்ன வருமோ தெரியவில்லை. ஆனால் அதிபரின் 'human scum' போன்ற கொச்சைச் சொற்களைக்கூட ஆளும் கட்சியினர் கண்டுகொள்ளாமல் விடுகின்றனர். தவறை ஆதரிப்பது போலவே, எதிர்க்காமல் இருப்பதும் தவறுக்குத் துணை போவதாகத்தான் ஆகும். இது புரையோடிப் போன குணமாக மாறிவிடாமல் பொதுவாழ்வில் நேர்மை, கண்ணியம் என்கிற பண்புகள் மீண்டும் அமெரிக்காவில் தழைக்க நாம்தான் ஆவன செய்யவேண்டும்.

★★★★★


கடல்கடந்த தமிழருக்கு மொழி, இலக்கிய, கலாச்சாரப் பாலமாக இருந்துவரும் தென்றல், மகிழ்ச்சியோடு தனது 20வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2016 ஆண்டு தொட்ட உச்சத்தில் தற்போது இல்லை. ட்ரம்ப் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளில் சிக்குண்டு பல இந்திய மக்கள்/மொழி பின்னணிகளைக் கொண்ட இதழ்கள் காணாமல் போனதுபோல் அல்லாமல், இன்னமும் தென்றல் வலம் வந்துகொண்டு இருக்கிறது. பிரதிகளைக் குறைத்த போதும் தரத்தில் சற்றும் குறையவில்லை. அதற்கு விளம்பரதாரர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் தரும் ஆதரவுதான் காரணம். தென்றல் குழுவினரின் மனமார்ந்த நன்றிகளை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்.

★★★★★


திக்கற்ற பெண் குழந்தைகளைத் தனது குழந்தையாகவே தத்தெடுத்துக் கொண்டு, அவர்களுக்கு உணவும் உறையுளும் கொடுத்து, கால்பந்து வீராங்கனைகளாக்கி இந்திய நாட்டைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் கடலூர் சு. மாரியப்பன். மனமிருந்தால் எவருக்கும் எதுவும் சாத்தியம் என்பதை நிரூபித்துள்ள சாதாரணர். அவரது நேர்காணல் உங்கள் மனதில் ஒரு புதிய ஜன்னலைத் திறக்கும். ஐ.நா. சபையில் உரையாற்றி உலகத் தலைவர்களின் கவனத்தைக் கவர்ந்தவர் ஜனனி சிவகுமார். இளம்சாதனையாளராக அறிமுகமாகும் அவரும் உங்களைச் சிந்திக்க வைப்பார். இருபதாம் ஆண்டின் இந்த முதல் இதழ் உங்கள் மனங்களைக் கொள்ளை கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

வாசகர்களுக்குக் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

தென்றல்
டிசம்பர் 2019

© TamilOnline.com