நாட்யாஞ்சலி: வெள்ளிவிழா
பொதுச் சேவையைக் குறிக்கோளாகக் கொண்டு ஒரு நடனப்பள்ளி செயல்பட முடியுமா? 'முடியும்' என்கிறார் ஸ்ரீமதி ஜெயந்தி கட்ராஜு (Ghatraju). மாசசூஸட்ஸ் மாநிலத்தின் வெஸ்ட்ஃபோர்டு நகரில் பல ஆண்டுகளாக 'நாட்யாஞ்சலி' பரதப் பள்ளியைத் தொடங்கி நிர்வகித்து வருகிறார் இவர். எண்ணற்ற நிதியுதவி நிகழ்ச்சிகளில் தமது பள்ளியை ஈடுபடுத்தி வருகிறார். தவிர, மருத்துவமனைகள்,முதியோர் இல்லங்களில் தமது மாணவிகளுடன் இணைந்து நாட்டிய விருந்தளித்து இல்ல வாசிகள் மனங்களை மகிழ்விக்கிறார். இவரது 'கலைமூலம் பொதுச்சேவை' என்னும் அணுகுமுறையைப் பாராட்டி, அமெரிக்க ஜனாதிபதி இருமுறை (2014, 2018 ஆண்டுகள்) தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்துள்ளார்.

வெள்ளிவிழா நிகழ்ச்சிகள்
திருவிளக்கு ஏற்றி வெள்ளிவிழா விழா நிகழ்ச்சிகள் துவங்கப்பட்டன. நகரத்தின் முக்கியப் பிரமுகர்கள்,நடன ஆசிரியைகள், நடனமணிகள் உட்படப் பலர் விழாவுக்கு வந்திருந்தார்கள். இந்த விழாவுக்கு மாசசூஸட்ஸ் கலாசாரக் கழகம் மற்றும் ஆக்டன், ஃபாக்ஸ்பரோ, லிட்டில்டன், குரோட்டன், வெஸ்ட்ஃபோர்டு கலாசாரக் குழுக்களும் பேராதரவை வழங்கின.

குரு ஜெயந்தி வரவேற்புரை வழங்கினார். அடுத்து, மாநிலப் பேரவை சார்பாக திரு ஜிம் ஆர்சியேரோ பாராட்டுரை வாசித்து குரு ஜெயந்திக்கு வாழ்த்துத் தெரிவித்தார். வெள்ளிவிழா மலரைப் பிரபல சங்கீத விதூஷி திருமதி தாரா ஆனந்த் வெளியிட, முதல் நகலைத் திருமதி ராணி அன்பு பெற்றுக்கொண்டார். அதன் பிறகு, நடனத்தின் பல்வேறு அம்சங்களை அலசும் பயில்மனைகள் ஒரே சமயத்தில் பல சிற்றரங்குகளில் நடந்தேறின.

தொடர்ந்து, நடனக்கலையில் மூத்தோரும் இளையோரும் இணைந்து நடனமாடி சபையோரை மகிழ்வித்தனர். வெள்ளிவிழாவின் மகுடமாக, 'நாட்யாஞ்சலி' மாணவியர் கண்கவர் நாட்டிய நிகழ்ச்சியை வழங்கினார்கள். குரு ஜெயந்தி (நட்டுவாங்கம்), குமாரி ஹம்சா ஷண்முகம் (வாய்ப்பாட்டு), ஹரி ஷண்முகம்(மிருதங்கம் ), நரேஷ் வைத்தீஸ்வரன் (புல்லாங்குழல்),ஸ்ரீநிதி டாட்லா (கீபோர்டு) ஆகியோர் அழகுறத் துணைநின்றனர்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com