சீரடி சாயி பரிவாரம் நடத்தும் குரு பூர்ணிமா
ஜூலை 24, 2005 ஞாயிற்றுக்கிழமையன்று சன்னிவேல் சமூக நிலையத்தில் சீரடி சாயி பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் குரு பூர்ணிமா தினத்தைக் கொண்டாட இருக்கிறார்கள்.

இந்தியாவின் முக்கிய சத்குருக்களில் ஒருவரான சீரடி சாய்பாபா மஹாசமாதி எய்தி நூறு ஆண்டுகள் ஆயினும், இன்னும் பல அற்புதங்களை நடத்தி வருவதாகப் பக்தர்கள் நம்புகிறார்கள்.

2001-ம் ஆண்டு சிகாகோவில் உள்ள சீரடி சாயிபாபா கோவிலில் துவங்கிய சாயி சித்திர யாத்திராவின் தொடர்பாக வளைகுடாப் பகுதியில் முதல் சத்சங்கம் ஒரு வியாழன் அன்று நடைபெற்றது. அன்று முதல் ஒரு சிறு பக்தர்கள் கூட்டம் வியாழன்தோறும் சந்தித்தது. ஒவ்வொரு பக்தரும் தனக்குத் தெரிந்தவர்களிடம் சீரடி சாயிபாபாவைப் பற்றியும், சத்சங்கத்தைப் பற்றியும் அவரவர் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்த முயற்சியால் பக்தர்களின் எண்ணிக்கை கூடி, இன்று சீரடி சாயி பரிவாரம் என்று விளங்குகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக வியாழன் தோறும் சத்சங்கம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதல் சத்சங்கம் Old Fellows Hall, 20589 Homestead Road, Cupertino - என்ற இடத்தில் நடைபெறுகின்றது. இதில் சாயி சத்சரிதாவிலிருந்து சில பகுதிகளை வாசித்தல் அல்லது விஷ்ணு சகஸ்ரநாமம், சாயி நாமாவளி, சாயி மஹிமா போன்றவை பாராயணம் செய்தல், பின் பஜனை, ஆரத்தி ஆகியவை நடைபெறும்.
சீரடி சாயிபாபாவுக்கு வளைகுடாப் பகுதியில் கோவில் ஒன்றை எழுப்பச் சீரடி சாயி பரிவாரம் ஓர் அமைப்பாகப் பதிவு செய்து கொண்டு 'லாப நோக்கற்ற அமைப்பு' என்ற தகுதிக்காகக் காத்திருக்கிறது.

அதிக விவரங்களுக்கு: www.shiridsaiparivar.org
மின்னஞ்சல்: saibandha@yahoo.com
தொலைபேசி: 408-260-1375 அல்லது 408-961-0262

நிர்மலா மற்றும் ஆனந்த்

© TamilOnline.com