அமைதியாக நிறைவேறிய கண்டதேவி தேரோட்டம்
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் வடம் பிடிக்கும் பிரச்சினை காரணமாக சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் கடந்த ஆண்டு பிரச்சனையின்றி அங்கு தேரோட்டம் நடைபெற்றது.

இந்த ஆண்டும் ஜூன் 21 அன்று ஆயிரத்திற்கு மேற்பட்ட காவல்துறை யினரின் பாதுகாப்புக்கு நடுவே அமைதியான முறையில் தேரோட்டம் நடந்து முடிந்தது.

1997-ம் ஆண்டு தேரோட்டம் நடத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே சச்சரவு ஏற்பட்டு, அது தொடர்பாகச் சிறுசிறு பிரச்சனைகள் இங்கு தோன்றின.

இதற்கிடையில் மார்க்சிய கம்யூனிஸ்ட் மாநிலப் பொதுச் செயலர் வரதராஜன், 'கடந்த ஆண்டுகளில் இவ்விழாவில் தலித்துகள் பங்கேற்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் அந்த உத்தரவை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இப்போது நடக்கும் விழாவில் அனைத்து தலித்துகளும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்' என்று கோரி மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதே போன்ற மனு ஒன்றைப் புதிய தமிழகம் கட்சியும் தாக்கல் செய்திருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்துக்கள் கண்டதேவி கோயில் தேரோட்டத்தில் தலித்துக்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும், இந்த நீதிமன்ற ஆணையை நிறைவேற்றப்படா விட்டால் மாவட்ட ஆட்சியரே பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். அது மட்டுமல்லாமல் குழப்பம் விளைப்பவர்கள் மீது சாதி வேறுபாடின்றி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

இதனையடுத்து ஸ்ரீ சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டத்தில் தலித் மக்களும் தேர் வடம் பிடிக்க அனுமதிக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திச் சிவகங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி மாவட்ட நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை செய்தது. தலித் மக்கள் தேரில் ஏறி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கண்டதேவி ஊராட்சி ஒன்றியத் தலைவர் தலைமையில் தலித்துகள் சிலர் தேர் வடம் இழுத்தனர். கோயில் தேரோட்டத்தில் பங்கேற்கச் சென்ற விடுதலைச் சிறுத்தைக் கட்சித் தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் போன்றோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டு பின்பு அன்று மாலையே விடுதலை செய்யப்பட்டனர்.

தேரோட்டம் அமைதியாக நடந்ததில் அதிகாரிகள் நிறைவு கொண்டாலும், முன்னணி தலித் தலைவர்களும் தொண்டர்களும், இது வெறும் கண்துடைப்பு என்று கருப்புக் கொடி ஏற்றிக் கண்டனம் தெரிவித்தனர். பொறுக்கியெடுத்த சில தலித் மக்கள் மட்டுமே தேரோட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர் என்றும், தேரோட்டத்தில் கலந்து கொள்ள வந்த தலித்துகள் பலரைக் காவல்துறை தடுத்தது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். அதிகாரிகள் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தனர். அமைதியைக் குலைக்க வந்த சிலரை மட்டுமே தடுப்புக் காவலில் வைத்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com