கணக்கு நோட்டின் கடைசிப் பக்கம்
பரந்த பள்ளி மைதானத்தின்
கிழக்கு மூலை
கல் பெஞ்சில்
தனித்து அமர்ந்திருக்கிறாள்
மவுனமாக.

பதின்ம வயதின்
துள்ளலுடன்
வகுப்புத் தோழமைகள்
எழுப்பிக் கொண்டிருந்த கூச்சல்
அவளுக்குச் சம்பந்தமே இல்லாத
உலகமாக.

அவளது
உள்நெஞ்சின் புழுக்கத்தை
உணராத காற்று
தவறுகிறது தலை கோத.

வாடிய அவள் முகத்தின்மேல்
அந்தி மஞ்சள் வெயிலும்
தகிக்கிறது அனலாக.

அருகிலிருந்த செடியில்
நிலம் நோக்கிக் கவிழ்ந்திருந்த
இளஞ்சிகப்பு ரோஜா
நினைவு படுத்துகிறது
சென்ற வாரம் இதே கிழமையில்
தூக்கில் தொங்கிய
அம்மாவை.

பெருந்துயரை இறக்கி வைக்க
இயற்கையிடமும்
சுமைதாங்கி கிடைக்காத
இளமனது
வடிக்கத் தொடங்குகிறது
தன் முதல் கவிதையை
கணக்கு நோட்டின் காலியான
கடைசிப் பக்கத்தில்,

தன்னோடு அழுவதற்கு
தனது வரிகள் மட்டுமே
துணை வருமென்று.

படம், கவிதை: ராமலக்ஷ்மி,
பெங்களூர்

© TamilOnline.com