TNF-பாஸ்டன்: தவத்திரு குன்றக்குடி அடிகளார்
ஜூன் 8, 2019 அன்று பாஸ்டன் அருகே உள்ள பில்லரிக்கா நகரத்தில் தமிழ்நாடு அறக்கட்டளை நடத்திய 'எங்கே போகிறோம்? வளர்ச்சியை நோக்கியா? வீழ்ச்சியை நோக்கியா?' என்ற பட்டிமன்ற நிகழ்ச்சிக்குத் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமை தாங்கி நடத்திக் கொடுத்தார். அடிகளார், தனது அன்பு, அறிவு மற்றும் தமிழாற்றலால் பாஸ்டன் தமிழர்களின் உள்ளங்களைக் கவர்ந்தார்.

பாரதி வித்யாஸ்ரமம், தமிழ் மக்கள் மன்றம், ரோடு ஐலாந்து தமிழ்ச் சங்கம், ஆக்டன் தமிழ்ப் பள்ளி ஆகியவற்றின் ஆதரவுடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு அறக்கட்டளையின் பாஸ்டன் கிளைத் தலைவர் திரு லக்ஷ்மி முனுகூர் அடிகளாரை வரவேற்று அறிமுகப் படுத்தினார். அறக்கட்டளை நிறுவனர் திரு சோமலே சோமசுந்தரம், அறக்கட்டளை 45 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நடத்தி வரும் சமூகப் பணிகளை விளக்கிப் பேசினார்.

பிறகு தொடங்கியது சூடான பட்டிமன்றம். நடுநடுவே அடிகளாரின் நகைச்சுவை விமரிசனம் மேலும் சுவை கூட்டியது. பவித்திரா ரத்தினவேல், மால்டன் ரவி, கனகராஜ், ரமேஷ் குமார் ஆகியோரைக் கொண்ட குழு நாம் வளர்ச்சியை நோக்கித்தான் போகிறோம் என்று வாதிட்டது. இணையம், ஸ்டெம் செல் ஆராய்ச்சி போன்ற அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் வாழ்க்கைத் திறன் மிக உயர்ந்திருக்கிறது. வளர்ச்சி தான் வாழ்க்கையின் தத்துவம் என்று அடித்துக் கூறினர். கார்த்தி ராமு, 'சரவெடி' சரண்ராஜ் , திலக் மற்றும் ராஜாவைக் கொண்ட எதிர்க்குழு. ஃபேஸ்புக், வாட்ஸாப் போன்றவை வந்த பிறகு குடும்பத்தில் நேருக்கு நேர் பேசுவது குறைந்துவிட்டது. தினமும் பல் தேய்க்கிறோமோ இல்லையோ, செல் போனை விடாமல் தேய்க்கிறோம் என்பன போன்ற வாதங்களால் நாம் வீழ்ச்சியை நோக்கித்தான் சென்றுகொண்டு இருக்கிறோம் எனப் பேசினர்.

அடிகளார் தமது தீர்ப்புரையில் பல உலக அறிஞர்களின் கருத்துக்களைத் தொகுத்து நாம் இப்பொழுது வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தாலும், இதை வளர்ச்சிப் பாதையாக மாற்ற முடியும், மாற்றவேண்டும் என்று முடிவு கூறினார்.

அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி,
பாஸ்டன், மாசசூசட்ஸ்

© TamilOnline.com