தெரியுமா?: நியூ ஹாம்ப்ஷயர் பிரதிநிதிகளவையில் வேதகோஷம்
மார்ச் 7, 2019 நாளன்று நியூ ஹாம்ப்ஷயர் மாநிலப் பிரதிநிதிகள் அவையில் (House of Representatives) துவக்கப் பிரார்த்தனையை நடத்த நியூ ஹாம்ப்ஷயர் இந்து ஆலயத்திற்கு அவை அழைப்பு விடுத்திருந்தது. அவையின் உறுப்பினர் மாண்புமிகு திருமதி லதா மங்கிப்புடி அவர்கள் இவ்வழைப்புக்குக் காரணமாக அமைந்தார். லதா அவர்கள் ஒரு தமிழர் என்று குறிப்பிடத்தக்கது. பதினோரு ஆண்டுகளாக பாஸ்டன் அருகே நாஷுவா நகரத்தில் உள்ள இந்த ஆலயம் இந்த கௌரவத்தை இரண்டாம் முறையாகப் பெற்றுள்ளது.

அழைப்பை ஏற்று மார்ச் 7ம் தேதியன்று ஆலய நிறுவனர் திரு வீரமணி ரங்கநாதன் அவர்கள் காலை ஒன்பது மணியளவில் அவையின் துவக்கப் பிரார்த்தனையை நடத்தினார். முதலில் அவையின் சபாநாயகர் மாண்புமிகு ஸ்டீவ் ஷர்ட்லெஃப் (Mr. Steve Shurtleff) அவர்கள் திரு வீரமணியை அறிமுகப்படுத்தினார். "ஸ்ரீ குருப்யோ நமஹ, மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ" என்று குரு மற்றும் தாய் தந்தையரை நமது பண்பாட்டின்படி வணங்கிய பின், யஜுர்வேதத்தில் வரும் தைத்திரிய உபநிஷதத்தின் 'பிருகுவல்லி'யிலிருந்து ஒரு பகுதியை ஓதினார். வேத மந்திரங்களையும், அவற்றின் ஆங்கில விளக்கத்தையும் மரியாதை கலந்த சுவாரசியத்துடன் அவையோர் கேட்டனர். எல்லாரும் ஆனந்ததுடன் இருக்கவேண்டும் என்ற சுலோகத்துடன் திரு வீரமணி பிரார்த்தனையை நிறைவு செய்தார்.

பிரார்த்தனையுடன் அவையைத் துவக்கும் வழக்கம் அமெரிக்கச் சட்ட மன்றங்களில் 230 வருடங்களாக இருந்து வருகிறது. 1983ம் ஆண்டில் அமெரிக்க உச்சநீதி மன்றத்தில் நடந்த ஒரு வழக்கில் தலைமை நீதிபதி வாரன் பர்கர் (Chief Justice Warren Burger) அவர்கள், சட்டசபைகளில் பிரார்த்தனை நடத்த அரசியலமைப்புச் சட்டப்படி அனுமதி உண்டு என்று தீர்ப்பளித்தார். பாரதத்தின் பண்டைய அறிவுப் பெட்டகமான வேத மந்திரங்கள் அமெரிக்க மாநிலத்தின் ஓர் அவையில் ஒலித்தது பெருமை தருவதாகும்.

மேலும் அறிய

அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி,
நியூ ஹாம்ப்ஷயர்

© TamilOnline.com