தெரியுமா?: சாகித்ய விருது: குளச்சல் மு. யூசுப்
சாகித்ய அகாதமியின் 2018ம் ஆண்டிற்கான மொழிபெயர்ப்பு விருது குளச்சல் மு. யூசுப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பாளர் யூசுப். மலையாள வட்டாரவழக்கை மிகச்சிறப்பாகத் தமிழாக்கம் செய்துவருபவர். முகம்மது பஷீர், புனத்தில் குஞ்ஞப்துல்லா போன்றவர்களின் மொழியை மூலத்திற்கு மிக நெருக்கமாக மொழிபெயர்த்துப் பாராட்டுப் பெற்றவர்.

'மணியன் பிள்ளையுடே ஆத்மகதா' என்ற பெயரில் மலையாளத்தில் ஜி.ஆர். இந்துகோபன் எழுதிய தன்வரலாற்று நூலை, 'திருடன் மணியம்பிள்ளை' என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருந்தார் யூசுப். காலச்சுவடு பதிப்பகம் அந்த நூலை வெளியிட்டிருந்தது. அந்த நூலுக்கு 2018ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது. யூசுப் ஏற்கனவே 'தமிழ்த்தொண்டர் விருது', 'உள்ளூர் பரமேஸ்வர ஐயர் விருது', வி.ஆர். கிருஷ்ணய்யர் விருது, தொ.மு.சி. ரகுநாதன் விருது, நல்லி திசையெட்டும் விருது, 'ஸ்பாரோ' அமைப்பு வழங்கிய சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றவர். அவரது கடும் உழைப்பிற்கு மற்றோர் அங்கீகாரம் இந்த விருது.

யூசுப் பற்றி முழுமையாக வாசிக்க

© TamilOnline.com