ஒரு பறவையை வரைவது
பறவையின் ஓவியம் ஒன்று
வரைய எத்தனிக்கிறேன்.

அது ஒருவேளை
பறந்துவிடக்கூடுமென்பதால்
ஆழ்ந்த உறக்கத்தில்
இருக்கும்போது
தூரிகையால் தொடுகிறேன்.

சிறகுகளுக்கான
இறுதிச்சொட்டு தீர்ந்த பின்
அதன் சிறகுகள்
மெல்ல அசைவதாய் உணர்கிறேன்.

பிறக்க இருக்கிற சில குஞ்சுகளை
ஓடுகள் உடைந்துவிடாமல்
கவனமாகக் கூட்டுக்குள்
வைக்கிறேன்.

இரவின் உணவு
ஒரு பெரும் விருந்தாய்
அமையட்டும் என
கூடுதலாகவே
தானியங்களை இரைக்கிறேன்.

தினமும் காலையில்
கூவவும் குஞ்சுகளைக்
கொஞ்சவும் இருக்கட்டும்
என தனித்தனியே
குரல்களை இணைக்கிறேன்.

பறவைகளோடு பேசும்
மனிதர்கள் இருவரை
எதற்கும் இருக்கட்டுமெனப்
பக்கத்தில் நிற்கவைத்துவிட்டு-

தூரிகைகளைக்
கழுவிக்கொண்டிருந்தேன்.

அந்தப் பறவை
மனிதனிடம் சொன்னது,

'காடுகளை இழந்த
என் வலியை
வரைய வண்ணங்கள்
இல்லை இவன் வசம்'

சுந்தர்ஜி ப்ரகாஷ்

© TamilOnline.com