ஷிவனா ஆனந்த்
16 வயதான ஷிவனா ஆனந்த் ட்ராய் உயர்நிலைப் பள்ளியில் ஜூனியர். தனது வகுப்பிலுள்ளவர்கள் கணினிப் பாடங்களில் மென்பொருள் எழுதுவதற்கான கோட்பாடுகள் புரியாமல் தவிப்பதைக் கவனித்தார். அடுத்த தலைமுறை இளையோர் இப்படிச் சிரமப்படக் கூடாது என்று எண்ணிய இவர், தன் சகோதரியுடன் சேர்ந்து டெக்டாகுலர் (Techtacular) என்கிற தன்னார்வ நிறுவனத்தைத் தொடங்கினார். பணிப்பட்டறைகள், நிகழ்வுகள், வகுப்புகள் ஆகியவற்றைப் பலவகைப் பின்புலங்களும் கொண்ட குழந்தைகள் தொழில்நுட்பம் கற்பதற்காக டெக்டாகுலர் நடத்துகிறது. ஜூன் மாதம் தொடங்கிய இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை நடந்த 10 வகுப்புகளில் 80க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி மாணவர்கள் App development, Scratch programming, networking முதலியவற்றைக் கற்றுள்ளனர்.

ஷிவனா ஆனந்துக்குச் சாதனை படைப்பது இயல்பாக வருகிறது. அண்மையில் SAT தேர்வில் முழுவதாக 1600 மதிப்பெண்களை முதல் முயற்சியிலேயே பெற்றது இதில் ஒன்று. ட்ராய் உயர்நிலைப் பள்ளி விட்ரை (Wittry) போட்டி, கால் பாலி பொமானோ உயர்நிலைப்பள்ளியின் மென்பொருள் எழுதும் போட்டி உட்படப் பலவற்றில் இவர் பரிசுகள் வென்றிருக்கிறார். பொமானோ பள்ளிப் போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் வந்த ஒரே பெண் போட்டியாளரான இவர் நான்காவது இடத்தைப் பிடித்தார். தான் படிக்கும் பள்ளியின், தேசிய அளவில் புகழ்பெற்ற Cyber Defence திட்டக் குழுவின் கேப்டன் ஆவார் இவர். பள்ளித் தலைமை ஆசிரியரின் சிறந்தோர் பட்டியல், நேஷனல் ஹானர் சொசைடி ஆகியவற்றிலும் இவர் இடம்பெறுகிறார்.



சமீபத்தில் HOSA (Health Occupations Students of America) நடத்திய பன்னாட்டுத் தலமைப்பண்புகள் மாநாட்டில் ஷிவனா கலிஃபோர்னியாவின் பிரதிநிதியாகப் பங்கேற்றார். அத்தோடு ட்ராயின் சயன்ஸ் ஒலிம்பியட் குழுவில் இவர் ஓர் உறுப்பினர். மிக அதிகமான தேசிய சேம்பியன்ஷிப்புகளை வென்று இந்தக் குழு சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

டெக்டாகுலரை மேலும் விரிவாக்க எண்ணிய ஷிவனா, அதன் ட்ராய் உயர்நிலைப்பள்ளிப் பிரிவை செப்டம்பர் மாதம் தொடங்கியுள்ளார். ஆரஞ்சு கவுன்டியின் இருபதுக்கும் மேற்பட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் டெக்டாகுலரின் மூலம் தமது சமுதாயங்களில் மாற்றத்தைக் கொண்டுவர வாய்ப்புப் பெற்றுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு: www.Techtacular.org

தொகுப்பு: மதுரபாரதி

© TamilOnline.com