கஜா புயல்: TNF நிவாரணப் பணி
"சுனாமியைவிடக் கொடூரமாகச் சேதப்படுத்தியிருக்கிறது கஜா புயல்" - இந்த ஒரு வரிச் செய்தியே இந்தப் புயலின் கோர தாண்டவத்தை உணர்த்தும். சற்றும் தாமதிக்காமல் 20 லட்ச ரூபாயை ஒதுக்கிக் களமிறங்கியது தமிழ்நாடு அறக்கட்டளை. மோசமான பாதிப்புக்கு உள்ளான நாகப்பட்டினம் (ஏட்டுக்குடி), திருவாரூர் (கோட்டூர், மன்னார்குடி, தலைக்காடு) மற்றும் தஞ்சாவூர் (கொறவயல்காடு, விளக்குவெட்டிக்காடு, கொல்லங்கரம்பை), புதுக்கோட்டை (கீரமங்கலம்) மாவட்டங்களின் கிராமப் பகுதிகளில் 15,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு நேரடியாகவே அறக்கட்டளை அலுவலர்கள், தன்னார்வலர்களுடன் சென்று உதவி வருகிறார்கள்.



மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, திருவாரூர் மற்றும் பெரம்பலூர் மருத்துவமனைகளுடன் இணைந்து மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகின்றன. மின்சாரம் இல்லாததாலும், மரங்கள் விழுந்து சாலைகள் அடைபட்டதாலும் தொடர்பு கொள்ளவே முடியாத குன்னலூர், தில்லைவிளாகம், எக்கல் போன்ற குக்கிராமங்களில் கூட அறக்கட்டளையின் தன்னார்வலர்கள், மெழுகுவர்த்தி, போர்வை, கொசுவர்த்திச் சுருள், குடி தண்ணீர், உணவு பொட்டலங்கள் போன்ற நிவாரணப் பொருட்களை வழங்கி அவசரத் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.



அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா மாநகரம், வளைகுடாப் பகுதி, நியூ ஜெர்சி, ஒக்லஹாமா, தென்மத்தியப் பகுதி, கனெக்டிகட், நியூ இங்கிலாந்து, சிகாகோ, கொலம்பஸ், ஆஸ்டின், ரோட் ஐலாண்ட் மற்றும் டென்னசி உள்ளிட்ட 40 தமிழ் மன்றங்கள் TNF அறக்கட்டளையுடன் கை கோத்து, அமெரிக்காவாழ் தமிழர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி நன்கொடை திரட்டி வருகின்றன. ABC கல்வித் திட்டத்துக்காக தத்தெடுக்கப்பட்ட அரசுப் பள்ளிகளைச் சீரமைக்கவும், புயலில் குடிசைகளை இழந்தவர்களுக்குப் புதிய கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கவும் அறக்கட்டளை திட்டமிட்டிருக்கிறது.

ஏகப்பட்ட கால்நடைகளை, விவசாய நிலங்களை, மரங்களை இழந்திருக்கிறது டெல்டா பகுதி. வாருங்கள் கை கோப்போம். தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் காப்போம்!

நன்கொடை வழங்க

ஜெயா மாறன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com