அரங்கேற்றம்: அனன்யா சேகரன்
ஆகஸ்ட் 4, 2018 அன்று சாரடோகா மகாஃபீ அரங்கத்தில் செல்வி அனன்யா சேகரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேறியது. வாசந்தி ராகத்தில் அமைந்த மதுரை முரளிதரனின் புஷ்பாஞ்சலியில் நிகழ்ச்சி ஆரம்பித்தது. பிறகு தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் ரஞ்சனி ராகத்தில் அமைந்த "தக்ஷிணாமூர்த்தே அமிர்தே" பாடலுக்கு நடனமாடினார். தொடர்ந்து "தேவி நீயே துணை" பாடலுக்கு மதுரை மண்ணிற்கே அழைத்துச் சென்றார்.

அரங்கேற்றத்தின் முக்கிய அங்கமாகத் தியாகராஜரின் "எந்தரோ மஹானுபாவுலு" என்ற பஞ்சரத்ன கீர்த்தனைக்கு அபாரமாக ஆடினார். ராமனின் பிறப்பு, தனுர் சரித்திரம், ராமனும் ஜானகியும் சந்தித்த முதல் தருணம் அனைத்தையும் அவர் அபிநயம் பிடித்த விதம் அற்புதம்.

நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியில் "கௌன் ராதிகா ராணி" தர்பாரி ராகப் பாடலில் சிருங்கார ரசத்தையும், "என்னடாயின விண்டின" பாடலில் ரௌத்ரத்தையும் "கும்மண கரயாதிரேய" ராகமாலிகைப் பாடலில் ஹாஸ்யம் மற்றும் பயத்தையும், "மைத்ரீம் பஜத" பாடலில் சாந்தத்தையம் அழகுறச் சித்திரித்தார். இறுதியில் பாரதியார் பாடலுக்கு விறுவிறுப்பாக ஆடினார். அரங்கேற்றத்தில் ஐந்து மொழிகளில் ஒன்பது தலைசிறந்த பாடலாசிரியர்களைக் கையாண்ட விதம் குறிப்பிடத்தக்கது.

மைத்ரி நாட்டியப் பள்ளியின் குரு மற்றும்ஆசிரியை ஷிர்ணிகாந்த், தனது மாணவிக்கு அற்புதமாக பயிற்சி தந்திருந்தார். அவர் நிகழ்ச்சியில் நட்டுவாங்கம் செய்ய, ஜெயந்தி உமேஷ் (வாய்ப்பாட்டு), லட்சுமி சுப்ரமண்யா (வயலின்), அஸ்வின் (புல்லாங்குழல்) என அனைவரும் மிகச்சிறப்பாகத் துணை நின்றனர்.

ராஜா ரங்கநாதன்,
சாரடோகா, கலிஃபோர்னியா

© TamilOnline.com