'அற்புதத் தீவில்' குள்ளர்கள்!
மலையாளத்தில் ப்ரித்விராஜ், மல்லிகா கபூர் நடித்த 'அற்புதத் தீவு' என்கிற படம் இப்போது தமிழில் சற்று மாறுதலுடன் தயாரிக்கப்படுகிறது. இதற்கான படபூஜை கடந்த சிலநாட்களுக்கு முன்பு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நடைபெற்றது.

படத்தில் 100க்கும் மேற்பட்ட குள்ளர்கள் நடிக்கவிருக்கின்றனர் என்பதுதான் இப்படத்தைப் பற்றிய சுவையான தகவல். ஏ.வி.எம்.மில் நடைபெற்ற படபூஜைக்கு குள்ளர்கள் அணிதிரண்டு வந்தது சிறப்பு. படத்தை இயக்கவிருக்கிறார் வினயன்.

சமீபத்தில் அந்தமான், இலங்கை, தமிழகத்தை தாக்கிய சுனாமிதான் இப்படத்திற்கு கரு. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஹெலிகாப்டரில் வந்த உதவி குழு ஒன்று எதிர்பாராத விபத்தில் சிக்க..கடலில் நீந்தி ஹெலிகாப்டரில் இருப்பவர்கள் 'அற்புதத் தீவை' அடைவதும், அத்தீவில் உள்ள ஆண்கள் அனைவரும் குள்ளர்களாக இருப்பதும், அங்கு விபத்தில் சிக்கியவர்கள் அடைகிற அனுபவங்கள் என்று கதை விரிகிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com