மூன்று தேசிய விருதுகளைத் தட்டிச் சென்றது 'ஆட்டோகிராப்'
2004ம் ஆண்டுக்கான 52வது சிறந்த சினிமா விருதுகளை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. சேரன் இயக்கத்தில் உருவான 'ஆட்டோகிராப்' திரைப்படம் மூன்று விருதுகளை தட்டிச் சென்றது சிறப்பு. சிறந்த ஜனரஞ்சகப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு படங்களில் 'ஆட்டோகிராப்'பும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் இடம் பெற்ற 'ஒவ்வொரு பூக்களுமே...' என்கிற பாடலைப் பாடிய பிரபல பின்னணி பாடகி சித்ரா சிறந்த பாடகியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதே போல் இப்பாடலை எழுதிய பாடலாசிரியர் பா. விஜய் சிறந்த பாடலாசிரியராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

'ஸ்வர அபிஷேகம்' படத்தின் இசையமைப்பாளராகப் பணியாற்றிய வித்யாசாகர் சிறந்த இசை அமைப்பாளராகவும், லஷ்யா படத்தின் மூலம் சிறந்த நடன இயக்குநராக பிரபுதேவாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதுபோல் சிறந்த தமிழ்ப் படமாக 'நவரசா' தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com