ஜலதோஷ மூலிகை (அத்தியாயம் 10)
கடிதத்தைப் பார்த்ததும் அருண் அவசர அவசரமாகப் பிரித்தான். அந்தக் கடிதம் எழுதியது யாராக இருக்கக்கூடும்? அந்த மர்ம நபராகத்தான் இருக்கும் என நினைத்தான். படிக்க ஆரம்பித்தான்.

அன்புள்ள அருணுக்கு,
வணக்கம். நான் உனக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பும் சந்தர்ப்பம் வந்துவிட்டது. என்ன செய்வது, உனக்கு ஒரு உதவி செய்வது என்றால், என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. You may call this is a sense of duty, a sense of obligation. இப்பத்தான் நல்லா கோடை விடுமுறை முடிஞ்சு திரும்பிவந்தேன். வந்தவுடன் உன்னைப் பற்றி கேள்விப்பட்டேன்.

நீ உன் வகுப்போட Pueblo Del Indegna போனது பற்றி அறிந்தேன். உண்மையிலேயே, அந்த கிராமத்துக்குள்ள போறதுக்குப் புண்ணியம் பண்ணி இருக்கணும்.

நல்லவேளையா நம்ம அரசாங்கம் அவங்களுக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்கு. அது ஒரு self sustained eco-system. அவங்க கிராமத்தில நிறைய அரிய செடிகொடிகள் இருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நம்ம ஊரு ஹோர்ஷியானா நிறுவனம் எப்படியாவது அந்தக் கிராமத்திலேயும் கை வைக்க எவ்வளவோ முயற்சி பண்ணினாங்க. நம்ம அரசாங்கம் அதை விடலை.

பார்த்தியா, நான் சொல்ல வந்ததை விட்டுவிட்டு எதை எதையோ சொல்றேனே.

ஹோர்ஷியானா ரொம்ப நாளாகவே Pueblo Del Indegna உள்ளே என்னதான் இருக்குன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருந்தாங்க. அங்க இருக்கிற மூலிகைகள் மேலே ஒரு கண்ணு இருந்திட்டே இருந்தது. உங்க வகுப்பு அங்க போகிறதுக்கு அனுமதி கிடைச்சது தெரிஞ்சதும் அவங்க ஒரு உளவாளியை உங்களோட அனுப்பினாங்க. இந்தக் காலத்தில பணத்தை வைச்சு யாரையும் மயக்கிடலாம். அந்த உளவாளி உங்ககூட வந்து அந்தக் கிராமத்தைப் பத்தின எல்லா உண்மைகளையும் தெரிஞ்சுக்கத்தான் அந்த ஏற்பாடு.

அந்த உளவாளி யாரு தெரியுமா? சொல்லு பார்க்கலாம்? ஒரு ஜோ கிளென். ஆம். நீங்க மிஸ்டர் கிளென் அப்படீன்னு அழைப்பீங்களா இருக்கும். அவர் உங்ககூட வந்து நிறைய விஷயங்களைச் சேகரிச்சுக் கொடுத்திட்டதாக் கேள்விப்பட்டேன்.

ஹோர்ஷியானா தனக்குப் போட்டியாக எதையும் அனுமதிக்காது. மிஸ்டர் கிளென் ஜலதோஷ நிவாரண மூலிகைபற்றிக் கேள்விப்பட்ட உடனேயே ஹோர்ஷியானாவுக்குச் சொல்லிட்டாரு. அந்த டேவிட் ராப்ளே உடனே தனது தீய சக்திகளை உபயோகப்படுத்தி அந்த மூலிகை எங்க நம்ப எர்த்தாம்டன் நகரத்துக்கு வந்துடுமோன்னு பயந்து அதைத் தடுக்க முயற்சி பண்ணிருக்காரு.

கொஞ்சம் யோசிச்சுப் பாரு, அருண். நம்ம ஊர்ல கிடைக்கிற எல்லா விதமான ஜலதோஷ மருந்துகளும் ஹோர்ஷியானா தயாரிப்புதான். அந்த மருந்துகள் மூலம் அவங்களுக்குப் பல லட்சங்கள் கிடைக்குது. அதுவும், பேச்சு என்னன்னா, அந்த மருந்துகள் சும்மா ஜலதோஷத்தைச் சரி பண்ற மாதிரி பண்ணிட்டு, மீண்டும் வரவைக்க ஏதோ சில்மிஷம் பண்ணுது. அயோக்கியப் பயலுக. சின்னக் குழந்தைகளோட உடல்நலத்துல இப்படி விளையாடறானுங்க.

நீ அந்த கிராமத்துப் பெண் கிட்டேயிருந்து ஜலதோஷ மூலிகை வாங்கப் போறன்னு தெரிஞ்சவுடனேயே, டேவிட் ஆளுங்கள அனுப்பி, அந்தக் கிராமத்துக்காரங்கள மிரட்டி, போன வார சந்தைக்கு வரவிடாம பண்ணிட்டாரு. அந்த மூலிகையை நம்ம நகரத்துக் குழந்தைகள் சாப்பிட்டா அப்புறம் உங்க யாருக்கும் ஜலதோஷமே வராதே. வரலைன்னா, அப்புறம் எப்படி அவங்க மருந்து விக்கும்? எல்லாம் பேராசை பிடிச்ச பயலுக. அந்த டேவிட் பண்ணின தில்லுமுல்லுதான் பாவம் அந்த கிராமத்து ஜனங்க எர்த்தாம்டனுக்கே வர முடியாம இருக்கு. இப்ப, வொர்த்தாம்டன் நகர்லேயும் அவங்கள வரவிடாம பண்ணப் பார்க்கிறார். என்ன அநியாயம்? இதை நாம அப்படியே விட்டுவிடக்கூடாது. எனக்கு ரத்தம் கொதிக்குது. அதுக்குத்தான் இந்த கடிதம் எழுதினேன்.

இன்னொரு கடிதம் ஜட்ஜ் சாருக்கு. அதைப் பிரிக்காமல் அப்படியே அவர்கிட்டே கொடு. அவர் உன்னை உதவிக்கு அழைச்சா நீ செய். ஜட்ஜ் குரோவ் மாதிரி நல்ல மனுஷங்க இருக்கிறதுனால தான் நம்ம நகரம் கொஞ்சமாவது உருப்படியா இருக்கு. இல்னேன்னா, டேவிட் ராப்ளே மாதிரி ஆளுங்க இன்னும் மோசம் பண்ணிருப்பாங்க.

உன்னை மாதிரி அடுத்தவங்களுக்கு உதவுகிற குழந்தைகள் நமக்கு ஒரு வரப்பிரசாதம். ஒன்றும் கவலைப்படாதே. ஹோர்ஷியானாவை ஒரு வழி பண்ணிடலாம்.

இப்படிக்கு,
அன்பு நண்பர்

அந்தக் கடிதத்தை படித்ததும் அருணுக்கு எல்லாம் விளங்கியது. தான் சந்தேகப்பட்டதும் ஒரு விதத்தில் உண்மைதான் என்பது தெரிந்தது. ஜட்ஜ் குரோவ் அவர்களுக்கு எழுதப்பட்டிருக்கும் கடிதம் மூலம் ஏதோ நல்லது நடக்க இருக்கிறது என்று புரிந்துகொண்டு சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான்.
(தொடரும்)

கதை: ராஜேஷ்
படம்: Anh Tran

© TamilOnline.com