சுஸ்வரா இசைப்பள்ளி: ஆண்டு நிறைவு விழா
ஜூன் 2, 2018 அன்று கலிஃபோர்னியாவில் செயல்பட்டு வரும் சுஸ்வரா இசைப்பள்ளியின் முதலாண்டு நிறைவுவிழா இர்வைன் நகரிலுள்ள சின்மயா கேந்திர அரங்கில் நடந்தேறியது. கலிஃபோர்னியாவில் சிறப்பாக இசைக்கல்வி மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கி வரும் மூத்த இசை ஆசிரியர்களான திருமதிகள் பத்மா குட்டி, சுபா நாராயணன் மற்றும் மாணவ, மாணவியர், அவர்தம் பெற்றோர் வருகை தந்து இளம் ஆசிரியை திருமதி. பிரியம்வதா பிரகாஷையும் அவர்களுடைய மாணவ மாணவியரையும் வாழ்த்தினர்.

விழாவில் சுஸ்வரா இசைப்பள்ளி மாணவ மாணவியரின் இசைத்திறன் சிறப்பாக வெளிப்பட்டது. விழாவின் நிறைவாக திருமதி. பிரியம்வதா தமது மூன்று மூத்த சிஷ்யைகளுடன் இணைந்து வயலினிசையை அர்ஜுன் நாராயணன் அவர்களின் மிருதங்கத்துடன் அற்புதமாக வாசித்தார்.

'சுஸ்வரா' பிரியம்வதா பிரகாஷ் அவர்கள், அக்கரை சுவாமிநாதன், 'சங்கீத கலாநிதி' 'பத்மஸ்ரீ' கன்யாகுமாரி, மற்றும் 'கலைமாமணி' எம்பார் கண்ணன் ஆகியோரிடம் வயலின் இசையைக் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகக் கற்றுத் தேர்ந்திருக்கிறார். டாக்டர் பேபி ஸ்ரீராம் அவர்களிடம் வாய்ப்பாட்டு கற்றுத் தேர்ந்தார். சென்னை நகரில் டிசம்பர் மாத இசைவிழா நிகழ்ச்சிகளில் பிரபல சங்கீத சபைகளில் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பக்கவாத்தியக் கலைஞராகவும், குரு கன்யாகுமாரி அவர்களுடன் இணைந்தும் தனித்தும் பல நிகழ்ச்சிகளை அளித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு இர்வைனில் குடியேறிய இவர் கடந்த ஆண்டு, ஆரஞ்சு கவுன்டியில் 'சுஸ்வரா' இசைப்பள்ளியைத் தொடங்கிப் பலதரப்பட்ட ஆர்வலர்களுக்கு கர்நாடக இசையும், வயலின் இசையும் கற்றுக்கொடுத்து வருகிறார்.

பிரியம்வதா சாஸ்திரி,
சதர்ன் கலிஃபோர்னியா

© TamilOnline.com