தெரியுமா?: இயல் விருது விழா
ஜூன் 10, 2018 அன்று கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா டொராண்டோவில் நடைபெற்றது.

கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மூலம் 50 ஆண்டுகளாகத் தமிழ் இலக்கிய உலகில் சிறப்புறத் தடம் பதித்துவரும் திரு. கல்யாணசுந்தரம் சிவசங்கரன் (வண்ணதாசன்) அவர்களுக்கு தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது வழங்கப்பட்டது.

பிற பரிசுகளைப் பெற்றோர்:
தமிழ்மகன் - 'வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்' - நாவலுக்கான புனைவுப் பரிசு
பேராசிரியர் இ. பாலசுந்தரம் - 'கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வளமும்' - அபுனைவுப் பரிசு
பா. அகிலன் - 'அம்மை' கவிதைத் தொகுப்பு - கவிதைப் பரிசு
பாலசரஸ்வதி - மொழிபெயர்ப்புப் பரிசு
டி.ஐ. அரவிந்தன் - 'கலையும் வாழ்வும்' நூல்
அனுக் அருட்பிரகாசம் - ஆங்கில இலக்கியப் பரிசு
சசிகரன் பத்மநாதன் - சுந்தர ராமசாமி நினைவு கணிமை விருது
செல்வி சங்கரி விஜேந்திரா - மாணவர் கட்டுரைப் போட்டி பரிசு தி. ஞானசேகரன், கலாநிதி நிக்கோலப்பிள்ளை - தமிழ் இலக்கிய சிறப்புப் பரிசுகள்
திருமதி துளசி சிவகுமாரன் - கவிஞர் செழியன் நினைவுப் பரிசு

விழாவின் முதன்மை விருந்தினர்களாகச் சிறப்பித்தவர்கள் தண்ணீர் திரைப்படப் புகழ் தீபா மேத்தா மற்றும் நியூ யார்க் ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை நிறுவிய முனைவர் பாலா சுவாமிநாதன்.

கவிஞர் வண்ணதாசனின் ஏற்புரை சுருக்கமாகவும், அடர்த்தியானதாகவும் அமைந்தது. "சின்னச் சின்ன விஷயங்கள் என்னை ஈர்க்கின்றன. பிரம்மாண்டமான நயாகரா அருவியில் நான் கண்டது உயரமாகப் பறந்த சிறிய பறவையைத்தான். நான் சின்னச் சின்ன விசயங்களால் ஆன மனிதன்" என்று சபையோரின் பலத்த கைதட்டல்களுக்கிடையே வண்ணதாசன் உரையாற்றினார். விழாவில் வண்ணதாசனின் 'அந்தரப்பூ' கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. பேரா. சொர்ணவேல் வெளியிட அதை அ. முத்துலிங்கம் பெற்றுக்கொண்டார்.

அ. முத்துலிங்கம்,
கனடா

© TamilOnline.com