தெரியுமா?: டொரான்டோவில் தமிழ் இருக்கை
ஹார்வர்டு தமிழ் இருக்கை வெற்றியைத் தொடர்ந்து டொரான்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழிருக்கை அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகிவிட்டது. கனடாவில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள். பல வருடங்களாக டொரான்டோவில் ஒரு தமிழிருக்கை அமைக்கவேண்டும் என்ற மக்களின் விருப்பம் இறுதியில் நிறைவேறியிருக்கிறது.

இதிலே பாராட்டவேண்டியது ஹார்வர்டு தமிழிருக்கை அமைப்பினரே முன்னின்று கனடா தமிழ்ப் பேரவையுடன் இணைந்து இதனை நடத்தியதுதான். மரு. ஜானகிராமன், மரு. சம்பந்தம், புரவலர் பால் பாண்டியன், முனைவர் பாலா சுவாமிநாதன் ஆகியோர் அமெரிக்காவிலிருந்து வருகை தந்து நன்கொடை நல்கி விழாவைத் தொடக்கிவைத்தனர். இந்தியாவிலிருந்து வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார் அமைச்சர் க. பாண்டியராஜன். நன்கொடையும் வாழ்த்தும் வழங்கினார் முனைவர் ஆறுமுகம். கனடாவின் பொறுப்பாளர்களான எழுத்தாளர் அ. முத்துலிங்கம், சிவன் இளங்கோ, மருத்துவர் வ.ரகுராமன், டன்ரன் துரைராஜா ஆகியோர் முன்னின்று விழாவை நடத்தினர்.

கனடிய தேசிய கீதத்தை 'செந்தூரா' பாடல்புகழ் லக்ஷ்மி பாட அதைத் தொடர்ந்து சூப்பர் சிங்கர் புகழ் ஜெசிக்கா தமிழிருக்கை கீதத்தை இசைத்தார். நித்திய கலாஞ்சலி மாணவிகள் நடனவிருந்து அளித்தனர். கனடிய பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி தமிழிருக்கையின் முக்கியத்துவம்பற்றி உரையாற்றினார். தமிழ்ப் பற்றாளர்கள் மேடையிலே தங்கள் நன்கொடைகளை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜோர்ஜெட் சினாட்டியிடம் கையளித்ததைத் தொடர்ந்து விருந்துபசாரம் நடைபெற்றது.

ஏறக்குறைய 600,000 கனடிய டாலர் (இந்திய ரூ3.12 கோடி) சேர்ந்தது அமைப்பாளர்களே எதிர்பாராதது. பல்கலைக்கழகத்தின் உபதலைவர் புரூஸ் கிட் பேசியபோது ஓர் இரவில், இரண்டே மணி நேரத்தில் இந்தத் தொகை திரட்டியது கனடிய வரலாற்றிலும், பல்கலைக்கழகத்தின் சரித்திரத்திலும் முதல்தடவை என பலத்த கைதட்டலுக்கு இடையே கூறினார். மக்கள் அணிவகுத்து வந்து தமிழிருக்கை நிறுவ நன்கொடை வழங்கியது ஒரு சரித்திர நிகழ்வாக அமைந்தது.

அ. முத்துலிங்கம்,
டொரான்டோ, கனடா

© TamilOnline.com